Sunday 27 December 2015

மகாலட்சுமி விரத மகிமை

மகாலட்சுமி விரத மகிமை

மகாலட்சுமி விரத மகிமைவரலட்சுமி விரதத்தை கன்னிப்பெண்களும், ஆண்களும் கூட கொண்டாடலாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. திருமணமான பெண்கள் தலைநோன்பு நோற்பது மிகவும் விசேஷமாகும். இந்த விரதத்திற்கு ஒரு புராண வரலாறு உண்டு. ஸ்ரீபரமேஸ்வரனும், பார்வதி தேவியும், கயிலை மலையில் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அவர்களது ஆட்டத்திற்கு நடுவராக சித்திரநேமி என்பவன் நியமிக்கப்பட்டிருந்தான். அவன் நியதி தவறி பரமேசுவரன் பக்கமாகவே பேசினான். நடுநிலை தவறிய சித்திரநேமியின் செயல் தேவிக்கு கோபத்தை உண்டாக்கியது. சங்கரி சினங்கொண்டாள். சித்ரநேமியை சபித்தாள். அவன் தேவியின் சாபத்தால் பெருநோய் பிடிக்கப்பட்டான்.

சித்ரேநாமி, வரலட்சுமி விரதம் அனுஷ்டித்து நோய் நீங்கியது கண்டு சங்கரி மகிழ்ச்சியடந்தாள். ஒருநாள் சிவனும் பார்வதியும் நவரத்தின மணி பீடத்தில் தேவாதி தேவர்கள், நாரதாதி மகரிஷிகள், குபேரன் முதலிய அஷ்ட திக்கு பாலகர்கள், பூதகணங்கள் புடைசூழ எழுந்தருளியிருந்தனர். வரலட்சுமி விரத மகிமையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டி, பார்வதி பரமேசுவரனிடம், “சுவாமி! வரலட்சுமி மகிமை அனைவரும் அறியும் வண்ணம் தேவரீர் திருவாள் மலர்ந்து அருள வேண்டும்” என்று பிரார்த்தித்தார்.
சர்வேசுவரனான சிவபெருமான், வரலட்சுமி விரத மகிமையை அனைவருக்கும் விளக்கமாக கூறினார். இங்ஙனம் சிவனருளால் சங்கரியும் மற்ற தேவர்களும் கேட்டு மகிழ்ந்த வரலட்சுமி விரத வைபவத்தை எல்லோரும்  கடைபிடித்து நற்பலன் அடைந்தனர்.

விரதங்களுள் உத்தமமான வரலட்சுமி விரதம் சகல சௌபாக்கியங்களையும் தருவது. புத்ர பௌத்ராதி அபிவிருத்திகளை ஏற்படுத்தும்படியான மகா சிரேஷ்டமான விரதம்.

இந்த விரதத்தை கடைபிடித்து சாபம் நிவர்த்தி பெற்ற சித்ரநேமியைப் போல் சாருமதி என்ற மற்றொரு பெண்ணும் வரலட்சுமி விரத மகிமையால் சகல சௌபாக்கியங்களையும் பெற்றாள். முன்னாளில் குண்டினி புரம் என்ற ஊரில் சாருமதி என்ற ஒரு பெண் வசித்து வந்தாள். இவள் கற்புகடம் பூண்டு ஒழுகி வந்தாள். கணவனையே கண்கண்ட தெய்வமாக வணங்கி வந்தாள்.

கடவுள் பக்தியும், பெரியோர்களிடம் பணிவும் கொண்ட சாருமதி, எல்லோராலும் பாராட்டப்பட்டாள். இப்பேர்ப்பட்ட நற்குண நங்கையான சாருமதிக்கு சர்வேசுவரனின் கிருபாகடாட்சம் கிடைத்தது. ஒருநாள் இரவு  சாருமதியின் கனவில் மகாலட்சுமி தோன்றினாள்.. “சாருமதி! சர்வ மங்களம் உண்டாகட்டும். ஆடி மாத பௌர்ணமிக்கு முந்திய வெள்ளியில் என்னை பூஜிப்பாயாக! நாள் உனக்கு சகல வரங்களையும் தந்தது அருளுவேன்” திருமகள், சாருமதிக்கு விரதம் கடை பிடிக்கும் முறையையும் அருளினார்கள்.

சாருமதி கனவு கலைந்து எழுந்தாள். திருமகளின் திருவாய் அமுதத்தை எண்ணி சுகானுபவம் கொண்டாள். சாருமதி தேவி திருமகளைச் சிந்தையிலே கொண்டு தோத்திரம் செய்தாள்.

“நமஸ்தே சர்வலோகா நாம் ஜகந்யை புண்யமுர்தயே
சரண்யே த்ரிஜகத் வந்த்யே விஷ்ணு வட்சதலாலய
“ஓம் ஸ்ரீ வரலட்சுமிதேவியே!

தாங்கள் சகல உலகங்களுக்கும் தாயாக எழுந்தருளிரட்சித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
சர்வ ஜனங்களாலும் ஆராதிக்கப்படுகிறீர்கள். ஸ்ரீமந் நாராயணனுடைய வாஸ்து தலத்தில்  வாசம் செய்கிறீர்கள். அப்பேர்ப்பட்ட ஸ்ரீ லட்சுமி தேவியே! தங்களை மனப்பூர்வமாக வணங்குகிறேன்.” சாருமதி தேவியின் அருள்வாக்கின்படி ஆடியில் தவமிருந்தாள். தோத்திரங்களால் திருமகளின் திருமேனிக்கு திருமஞ்சனம் செய்தாள்.  ஆயிரத்து எட்டு நாமாக்களால் அலங்காரம் செய்தாள்.

வரலட்சுமி பிரத்யலட்மாகி சாருமதிக்கு அஷ்ட ஐஸ்வரியங்களையும் வழங்கினார். சாருமதி வரலட்சுமி விரத மகிமையை மற்றவர்களுக்கும் சொன்னாள். எல்லோரும் ஒன்று சேர்ந்து வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தனர். அழகாக அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் தாம்பாளத்தில் பச்சரிசி பரப்பி, கலசம் வைத்து கலசத்துள் ஸ்ரீ லட்சுமி தேவியை ஆவாஹனம் செய்து பூஜையைத் தொடங்கினார்.

சாருமதியும் தோழியர்களும் ஸ்ரீலட்சுமி தேவியை பூஜித்தார்கள். வரலட்சுமி தேவியின் பேர் அருளால் அனைவரும் பெரும் பேறு பெற்றனர். வரலட்சுமி விரதத்தை ஆரம்பித்து வைத்த சாருமதியை புகழ்ந்து போற்றினர். இந்த விரதத்தை அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான நந்தனார். விக்ரமாதித்த மன்னன் அனுஷ்டித்து சகல சௌபாக்கியங்களையும் பெற்றனர்.

ஸ்ரீலட்சுமிக்கு அருகம்புல் மிகவும் விசேஷம். அருகம்புல்லால் அஷ்ட லட்சுமியை பூஜிப்பதால் “நாம் அருகுபோல் வேரூன்றி ஆல்போல் தழைத்து பெருவாழ்வு வாழ்வோம்” என்பது சான்றோர் வாக்கு! செல்வத்திற்கு அதிதேவதையாக விளங்கும் பிராட்டியாரை சுபலட்சுமி என்றும் ஸ்ரீதேவி என்னும் போற்றி வணங்குவார்.
வரலட்சுமி விரதத்தை அப்பண்டிகை தினத்தன்று சந்தியா கால வேளையில் கொண்டாட வேண்டும். வீட்டை நன்றாக மெழுகி மாக்கோலம் இட வேண்டும். விளக்கேற்றி வாசனைப் புகையை வீடெல்லாம் நிறைந்திருக்க செய்ய வேண்டும். கும்ப கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சம்பழம், பொற்காசுகள் ஆகியவற்றை இட வேண்டும்
.
கும்பத்தை வெண்மையான பட்டு வஸ்திரத்தால் அலங்கரித்து அம்பாளின் முகத்தை அமைக்க வேண்டும். மஞ்சள் சரடை கும்பத்தின் மீது சாத்த வேண்டும். அம்பாளை கிழக்கு முகமாக எழுந்தருளச் செய்ய வேண்டும். நாம் வலது பக்கம் அமர்ந்து பூஜை செய்ய வேண்டும். மஞ்சள் சரடையும் கும்பத்துடன் சேர்த்து பூஜிக்க வேண்டும்.

பூக்களாலும், தூப தீபங்களாலும் அம்மனை ஆராதித்து மஞ்சள் சரடை எடுத்து வலது மணிக்கட்டில் பக்தி சிரத்தையுடன் கட்டிக்கொள்ள வேண்டும் நோன்பு சரட்டில் ஒன்பது முடிகள் போட்டு பூவை சேர்த்து மற்றொரு முடி போட வேண்டும். இனிப்பு கொழுக்கட்டை நிவேதனம் செய்து, பாத்யம், அர்க்கியம் முதலிய பதினாறு வகை உபசரணங்களையும் செய்ய வேண்டும். உற்றார் உறவினர்களுக்கு நிவேதனங்கள் கொடுத்த பிறகு தான்.

நம் நிவேதனம் உண்ண வேண்டும். அன்று முழுவதும் பகவத் சிந்தனையுடன் அஷ்ட லட்சுமி தோத்திரங்களைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். இரவில் கலசத்தை அரிசி பாத்திரத்துக்கு வைப்பது விசேஷம். அதனால் அன்னபூரணியின் பேரருள் இல்லத்தில் நிரந்திரமாக நிறைந்திருக்கும்! அட்சயமாக இருப்பவள் அம்பாள்! கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட தேங்காயை அதற்கடுத்த வெள்ளிக்கிழமை உடைத்து பாயசம் செய்யலாம்.
இவ்விரதத்தை கடை பிடிப்பதால் கர்ம நோய்கள் நீங்கும். நல்ல ஆரோக்கியம் ஏற்படும். திருமணம் நடைபெறும். புத்திரபாக்கியம் உண்டாகும். வரலட்சுமி விரத மகிமையால், நாம் சகல சௌபாக்கியங்களையும் பெற்று அஷ்ட ஐஸ்வர்யத்துடன் வாழலாம்.

No comments:

Post a Comment