Sunday 27 December 2015

பஞ்ச நந்திபெருமான் பற்றிய ஒரு தகவல்

பஞ்ச நந்திபெருமான்  பற்றிய ஒரு தகவல் .....

பெரிய சிவாலயங்களில் ஐந்து வகையான நந்திகள் அமைந்திருப்பதைக் காணலாம்.

இவை முறையே இந்திர நந்தி,வேதநந்தி என்னும் பிரம நந்தி, ஆத்ம நந்தி,மால் விடை என்னும் திருமால் நந்தி,தரும நந்தி என்பவையே இவை.

1.இந்திர நந்தி:

ஒரு சமயம் இந்திரன் இடப (காளை) வடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கினான். போகங்களின் அதிபதியாகிய இந்திரன் வடிவாக விளங்கும் இந்த நந்தியைப் போகநந்தி என்றும் இந்திர நந்தி என்றும் அழைக்கின்றனர். இந்த நந்தியைக் கோயிலுக்கு வெளியே சற்று தொலைவில் கருவறையை நோக்கியவாறு அமைக்கின்றனர்.

2.வேத நந்தி:

ஒருமுறை பிரம்மதேவன் நந்தி வடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கினான். வேதனான பிரம்மன் , நந்தி வடிவம் தாங்கியமையால் இந்த நந்தியை `வேத நந்தி' , `வேத வெள்விடை' , `பிரம்ம நந்தி' என்று பல பெயர்களால் அழைக்கின்றனர்.
பிரம்மம் என்பதற்கு அளவிட முடியாத பெருமைகளை உடையது என்பது பொருளாகும். அதற்கேற்ப இந்த நந்தியை மிகப்பெரியதாகவும் கம்பீரமாகவும் அமைப்பர்.
இந்த நந்தியை சுதையினாலும் சுண்ணாம்புச் சாந்தினானும் மிகப்பெரிய அளவில் அமைக்கின்றனர்.  திருவிடைமருதூர் , ராமேஸ்வரம் [சுவாமி சந்நிதி முன் உள்ள சுதை வேலைப்பாட்டால்
ஆன இந்த நந்தி 22 அடி
நீளமும், 12 அடி அகலமும்,
17 அடி உயரமும் உள்ளது[, காஞ்சிபுரம் முதலான தலங்களில் இத்தகைய பிரம்மாண்டமான வேத வெள்விடையை பெரிய மண்டபத்துள் காணலாம்.

3.ஆன்ம நந்தி:

ஆலயத்தில் கொடி மரத்தையொட்டி தலைமை நந்தியாக அமையும் நந்தி `ஆன்ம நந்தி' எனப்படும். இது உலக உயிர்களான (பசுக்கள்) ஆன்மாக்கள் பதியாகிய சிவபெருமானைச் சார்ந்து அவனுடைய நினைவில் நிலைபெற்றிருக்க வேண்டிய தன்மையை உணர்த்துகிறது. சிவாலயத்தில் பிரதோஷக் காலங்களில் இந்த நந்திக்குத்தான் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது.
பிரதோஷ காலத்தில் இவருக்கே முக்கியத்துவம் தருவர்.

நந்தியிவன் குறுக்கே செல்லக் கூடாது எனவும் தடை விதிப்பர். இதற்கு காரணம் உண்டு. நந்தி கர்ப்பக்கிரகத்திலுள்ள சிவனைப் பார்த்தவாறு இருக்கும். இது சிவனின் வாகனம். வாகனம் எதுவாயினும் அது ஜீவாத்மாவைக் குறிக்கும். ஜீவாத்மா கருவறையிலுள்ள பரமாத்மாவைக் (இறைவன்) பார்த்த வண்ணம் உள்ளது. ஜீவாத்மாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பது தான். அந்த கோட்பாட்டை விளக்கும் பொருளாக நந்திதேவர் சிவனை நோக்கி இருக்கிறார்.

மேலும் நந்தீஸ்வரரை வணங்கி அவரது அனுமதி பெற்றே நாம் கோயிலுக்குள் நுழைய வேண்டும்.அது மட்டுமல்ல, இறைவனின் முதல்வன் விநாயகர். கோயிலில் முதல்வன் நந்தீஸ்வரர். எனவே தான் விநாயகருக்குரிய அருகம்புல் மாலை நந்தீஸ்வரருக்கும் அணிவிக்கப்படுகிறது.

4.மால் விடை:

ஒரு சமயம் திரிபுராதிகளை வெல்லுவதற்காக தேவர்கள் சிவபெருமானுக்கு சிறந்ததொரு தேரினைச் செய்து கொடுத்தார்கள். தாங்கள் அளிக்கும் இந்தத் தேர் இல்லாமல் சிவபெருமானால் முப்புரங்களை வெல்ல முடியாது என எண்ணினார். அதை உணர்ந்த சிவபெருமான் அந்தத் தேர்தட்டின் மீது தன் வலது காலை ஊன்றி ஏறினார்.
அவ்வாறு அவர் ஊன்றிய போதே அத்தேரின் அச்சு மளமளவென்று முறிந்தது. தேவர்கள் தாங்கள் செய்தளித்த ஒப்பரிய தேர் பெருமானின் ஒரு கால் அழுத்தத்தைக் கூடத் தாங்க மாட்டாமல் முறிந்தது கண்டு அஞ்சி பெருமானைத் தொழுதனர்.
அப்பொழுது திருமால் இடபடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கி அவரை மகிழ்வித்தார். இந்நினைவு நீங்காது இருக்கும் பொருட்டு தானும் நந்தி வடிவம் கொண்டு அவர் சன்னிதியில் நிலையாக எழுந்தருளினார். இந்த நந்தி சக்தி பதமான இரண்டாவது ஆவரணத்துள் அமைந்துள்ளதாகும். இதனை `மால்விடை' , `மால்வெள்விடை' என்று பலவாறு அழைப்பர்.

5.தரும நந்தி:

மகா மண்டபத்தில் அமையும் சிறு நந்தியே தரும நந்தி என்பதாகும். உலகம் சிவபெருமானிடத்தே ஒடுங்குகின்ற சங்கார காலத்தே உலகம் யாவும் அழியும். பிரளயவெள்ளம் பொங்கிப் பெருகி வானளவு எழுந்து உலகினை அழிக்கும் அந்த சங்கார காலத்தில் யாவும் சிவபெருமானிடம் ஒடுங்கும் அப்போது தருமம் மட்டும் நிலைபெற்று இடபடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கும்.
இவ்வாறு தன்னைத் தாங்கும் இடபத்தை பெருமான் ஆரத்தழுவிக்
கொண்டான். இவ்வகையில் தரும நந்தியானது இறைவனைப் பிரியாது அவனுடனேயே இருக்கும். இதை உணர்த்தும் வகையில் இந்த நந்தி இறைவனுக்கு அருகில் மகாமண்டபத்திலேயே எழுந்தருளியிருக்கின்றது.
பெரிய ஆலயங்களில் இத்தகைய ஐந்து நந்திகள் இருப்பதைக் காண்கிறோம். திருவண்ணாமலை, காஞ்சிபுரம் முதலான தலங்களில் பஞ்ச நந்திகள் சிறப்புடன் போற்றப்படுகின்றன.

அதிகார நந்தி=அதிகார நந்தியை சைவ மதத்தின் முதல் குரு என்று சொல்கிறார்கள். நந்தி எனும் சொல்லுக்கு எப்போதும் ஆனந்த (மகிழ்ச்சி) நிலையில் இருப்பவர் என்று பொருள். நந்தியின் உருவம் சமம், விசாரம், சந்தோஷம், சாதுசங்கம் ஆகிய நான்கு ஆத்ம குணங்களை உணர்த்துகிறது. இந்த நான்கு ஆத்ம குணங்களும் ஒரு பக்தனிடம் இருந்தால்தான், அவனுக்கு ஈசனை சச்சிதானந்த அறிகுறி வடிவமாக உணர முடியும்.

இதன் படி  நந்திபெருமான், சிவபெருமானின் அம்சமாக, அவர் சாரூபம் பெற்றவராக இருப்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். இவரது அவதாரம் ஸ்ரீசைல மலையில் நிகழ்ந்தது.

நூறாண்டுகளுக்கு மேல் சிவனை நோக்கி தவம் இருந்து 16 வரங்களை பெற்றார். அதாவது உன் பாதகமலத்தில் என்றென்றும் இருக்க வேண்டும் என்று வரம் பெற்றார்.
நந்தியின் நல்ல உள்ளத்தை கண்ட ஈசன், அவருக்கு சிவாலயத்தில் எல்லா அதிகாரத்தையும் கொடுத்தார். அதனால்தான் அவருக்கு அதிகார நந்தி என்ற பெயர் ஏற்பட்டது.

இந்த உயர்ந்த அதிகாரத்தை பெற்றது மட்டுமின்றி இறைவனிடம் இருந்து சிவாகமங்கள் அனைத்தையும் கற்றார். பிறகு அந்த சிவகாமங்களை நந்தி நமக்கு அருளினார் என்று சொல்லபடுகின்றது.
இந்த அடிப்படையில் பார்த்தால், அவர் குருவாக மட்டுமின்றி ஆலயத்துக்கு காவல்காரர் போல கம்பீரமாக இருப்பது புரியும்.

இன்னொரு வகையில் பார்த்தால் ஈசன் போலவே இவருக்கும் நெற்றிக்கண் உண்டு. மான், மழு எல்லாம் உடையவர். இவர் கைகளில் பொன் பிரம்பை ஏந்தி காவல் செய்கிறார். இதனால் நாம் குரு மரபுக்கெல்லாம் முதல் குரு நாதன் என்று நந்தியெம்பெருமானை திருமூலர் புகழ்ந்து பாடியுள்ளார்.

இப்படி சர்வ வல்லமை படைத்த நந்தியை நாம் மனம் உருகி வழிபட வேண்டும். "சிவத்தியானம் செய்யும் மகாவித்துவானாகிய நந்தியே... மகாதேவனை தரிசனம் செய்ய எனக்கு அனுமதி கொடு" என்று மார்புக்கு நேராக கரம் குவித்து வழிபடுதல் வேண்டும். இல்லையெனில், "நந்தியெம் பெருமானே... பிறவா யாக்கைப் பெரியோனும் தனக்குவமை இல்லாதவனும் எல்லாம் வல்லவரும் முழு முதல் பொருளமாகிய சிவபெருமானை வழிபட அனுமதி வேண்டுகிறேன்.

ஈசனின் திருவருள் கிடைக்க எனக்கு உதவி செய்யுங்கள் அய்யனே" என்று கூறி வழிபடலாம். மொத்தத்தில் சிவபெருமானை வழிபட நந்திகேசுவரரிடம் அனுமதி பெற வேண்டியது அவசியமாகும். நந்திகேசுவரர் ஆசீர்வாதத் துடன்தான் நாம் கருவறை பகுதிக்குள் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்பது காலம் காலமாக மரபாக உள்ளது.
சுயஷா தேவி நந்திஎம்பெருமானின் தேவியாவார்.

No comments:

Post a Comment