Wednesday 23 December 2015

நல்வாழ்வு நம் கையில்

நல்வாழ்வு நம் கையில்   !!!

எங்களுடைய தாய், தந்தை, உடன் பிறந்த சகோதரர்கள், சகோதரிகள், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வேண்டுகோள்!

நமக்கு எந்த நோய்களும் வரவேண்டாம் என்று விரும்புவோர் காபி, தேனீர், மீன், முட்டை, இறைச்சி வகைகள், பொடி, புகையிலை வகைகள், மது வகைகள், பெண் ஆசை, தீய எண்ணங்கள் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும்.

நமது உடல் வளர்ச்சிக்கு உணவு தேவை, அவை சரியாக செரிமானமாகவில்லை என்றால் அசீரணக் கோளாறு என்கிறோம். இதனால் உண்டாவது தான் வாதம், பித்தம், சிலேத்துமம் என்று நமது சித்தர்கள் கூறி உள்ளார்கள்.

“ வாதம்” சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களிலிருந்தும் அதாவது குடல்வால், குடல்புண், குடலிறக்கம், குடல்பிதுக்கம் குடல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களிலிருந்தும் மருந்து, மாத்திரைகள், உண்ணாமலும், அறுவை சிகிச்சை இல்லாமலும் வாழ வேண்டு மென்றால் ஆறு மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்து சாப்பிட வேண்டும். தினமும் காலையும், மாலையும் கழிவுகளை வெளியேற்ற வேண்டும்.

யோகா மருத்துவத்தில் வாந்தியம் ( வாமனதௌதி ) எனப்படும் கிரியைப் பயிற்சியை நாம் கடைப்பிடிப்பதால் ஆயுள் முழுவதும் “ பித்தம்” சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களிலிருந்தும் மருந்து, மாத்திரைகள் இல்லாமல் வாழலாம்.

“ கபம்” சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களிலிருந்து அதாவது ஈஸ்னோபீலியா, ஆஸ்துமா, டி.பி. என்கிற காச நோய், சைனஸ் மற்றும் பலவிதமான சிலேத்துமம் ( சளி ) சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களிலிருந்தும் மருந்து, மாத்திரைகள் இல்லாமல் வாழ வேண்டும் என்றால், வாரம் இரண்டு முறை எண்ணெய் தேய்த்துத் குளிக்க வேண்டும்.

மேலும் மூச்சுப் பயிற்சியுடன் பிராணயாமம் என்கிற பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருபவர்களுக்குக் காற்றினால் ஏற்படும் அனைத்து நோய்களிலிருந்தும் முழுநலம் அடையமுடியும்.

மேற்கூறிய அசீரணத்தினால் உருவான வாதம், பித்தம், சிலேத்துமத்தைச் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமாளித்துக் கொள்கிறார்கள். ஆனால் சமாளிக்க முடியாத ஒரு பிரச்சனை மலச்சிக்கலே.

குழந்தைகள் முதல் மரணத் தருவாயில் வாழும் ஆண், பெண் அனைவருடைய அனைத்து நோய்களுக்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது மலச்சிக்கல், அதாவது “ காலையில் மலச்சிக்கலும், மாலையில் மனச்சிக்கலும் இல்லாமல் இருப்பது ஆரோக்கியமான நல்வாழ்க்கை” என்று நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தார்கள்.

இந்த மலச்சிக்கல் நமக்குத் தினமும் ஏற்படாமல் வாழ ஒரு நாளைக்கு அல்லது ஒரு வேளைக்கு குறைந்தது 2 லிட்டர் முதல் 5 லிட்டர் வரை தண்ணீர் அருந்தினால் நமது உடலில் சூடு குறையும். இறுகிய மலம் இளகும், மலச்சிக்கலைச் சரி செய்ய மூல நோய் வராது. இதனால் மூலபௌத்திரம் நோய் வராமல் தடுக்கின்றது.

அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தியவர்களுக்கு 32 விதமான நோய்கள் சரிசெய்யப் படுகின்றன என்று 18 சித்தர்களும் கூறி இருக்கின்றார்கள்.
இவ்வாறு தினமும் கடைப் பிடிக்காதவர்கள் அனைவரும் நோயாளிகளே !

இதனால் நமக்குக் கஷ்டங்கள், கடன் தொல்லைகள், வாழ்க்கையில் வெறுப்பும், சலிப்பும் தோல்வியும், தனி மனித வாழ்வில் பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு, தாழ்வு மனப்பான்மை வஞ்சம் ஆகியவை ஏற்படும்.

மேலும் நமக்கு வியாதிகள் இல்லாமல் வாழ நமக்குள் உருவாகி இருக்கின்ற நோய்கள் நலமடைய, கஷ்டங்கள், கடன் தொல்லைகள் அதிகரிக்காமல் இருக்கவும், சோதனையும், வேதனையும் குறைய விரும்புவோர்கள், “ வைகறை துயிலெழு” என்று முன்னோர்கள் அறிவுரையின்படி அதிகாலை அதாவது “ பிரம்ம முகூர்த்தம்” என்று அழைக்கும் 3 மணி முதல் 5 மணிக்குள் கட்டாயம் படுக்கையை விட்டு எழுந்து முகம், கைகள், கால்களைக் குளிர்ந்த நீரினால் சுத்தம் செய்து மலம், சிறுநீர் கட்டாயம் வெளியேற்ற வேண்டும்.

முகத்திற்கு மூச்சுப் பயிற்சியும், கை, கால்களுக்கு எளிய முறை உடற்பயிற்சியும், மனதிற்கு அகத்தவமும், உயிருக்குக் காயகல்பப்பயிற்சியும், ஜீவகாந்தப் பெருக்கத்திற்கு தீப பயிற்சியும், கண்ணாடி பயிற்சியும் செய்யவேண்டும். முடிந்தால் யோகாசனங்கள் செய்து உடல் மன நலகுறைகளைச் சரி செய்யப் பல்வேறு பயிற்சிகள் மூலம் மேற்கூறிய பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

பொதுவாக நமது உடலுக்குக் குறைந்தது 6 மணி நேரம் மட்டும் ஓய்வு எடுத்தால் போதும். குழந்தைகளுக்கும், நோயாளிகளுக்கும் 8 மணிநேரம் வரை ஓய்வு எடுக்கலாம். தினமும் நாம் தூங்க இரவு 9:00 மணிமுதல் 10:00 மணிக்குள் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும்.

ஏனென்றால் நல்ல, கனவுகள் இல்லாத, ஆழ்ந்த, கைகள், கால்கள், வலி இல்லாத நிம்மதியாகத் தூங்க வேண்டுமென்றால் தூங்குவதற்கு 2 மணிநேரம் முன்பு இரவு உணவு உண்ண வேண்டும்.

இவ்வகைச் செயல்களால் ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக மருந்தில்லாமல் வாழலாம்.

திருவள்ளுவர் திருக்குறளில் பொருட்பாலில் 95 வது அதிகாரத்தில் மருந்து என்கிற பகுதியில் 948 குறளில்:
“ நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். ‘’ அதாவது, நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்குப் பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.

கணக்குப் பாடத்திற்கு வாய்ப்பாடு எவ்வளவு கட்டாயமோ அதுபோல நாம் நோயின்றி வாழ உடலுக்கும் ஒரு வாய்ப்பாடு உண்டு.

  1.  ஒரு நாளைக்குக் காலை, மாலை இரண்டு முறை மலம் கழிக்க.

  2.  வாரம் இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
  ( செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்களுக்கு. ).
( புதன், சனிக்கிழமைகளில்   ஆண்களுக்கு )

  3. மாதம் இரண்டு முறை தாம்பத்திய உறவு ( விருப்பமுள்ளவர்களுக்கு மட்டும் )

  4. வருடம் இரண்டு முறை ( 6 மாதத்திற்கு ஒருமுறை ) பேதி மருந்து சாப்பிட     வேண்டும்.

“ பத்தியமா பக்குவமா ‘’
  ஒவ்வொரு பயிற்சியையும் தினமும் செய்வது நமது உடலைப் பக்குவபடுத்தும், ஆனால் தேவைப்படும் பொழுது செய்யப்படும் பயிற்சிகளே ( பத்தியம் ) மருத்துவமாகும்.
 
“ வருமுன் காப்போம்” என்பது பக்குவம். வந்தபின் துன்புறுவதும், ஆபத்தைச் சந்திப்பதும், நிவாரணம் பெற விரும்புவதும், இன்றைய மனித சமுதாயத்தில் இயல்பு நிலையாக மாறிவிட்டது.

ஆகவே, “இயற்கையை நேசிப்போம், இயற்கையும் நம்மை நேசிக்கும்.’’

ORGAN ( BIOLOGICAL ) CLOCK

உடல் உள்உறுப்புகள் செயல்படும் நேரம் காட்டும் கடிகாரம்

நமது உடலில் உள்ள உள் உறுப்புகளின் இயக்கங்களை கீழ் வரும் நேரங்களில் நாம் பயன் படுத்தும் பொழுது கிடைக்கும் நன்மைகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
 
அதிகாலை: 3 மணி முதல் 5 மணி வரை நுரையீரல் இயங்கிக் கொண்டிருப்பதால் இந்நேரத்தில் எழுவது உடல் நலத்திற்கு மிகவும் நன்று. யோகாசனம், மூச்சுப் பயிற்சி, தியானம், போன்றவைகளை இந்நேரத்தில் செய்வது மிகவும் நல்லது.

காரணம் விடியற்காலை 3.30 மணியிலிருந்து, 5 மணி வரை வெட்ட வெளியில் அமுதக் காற்று ( ஓசோன் ) ஒன்று வீசுகிறது. அந்தநேரத்தில் எழுந்து தியானம் செய்வதால் நாம் ஒரு புதிய சக்தியைப் பெறுகின்றோம்.

சான்றாக நடைபாதையில் படுத்து உறங்கும் ஏழை, எளிய மக்களை அதிகமாக எந்த நோயும் தாக்குவதில்லை. இதற்குக் காரணம் வெட்ட வெளியில் அவர்கள் அதிகாலையில் அந்த அமுதக்காற்றைச் சுவாசிப்பது தான். ஆஸ்துமா நோயாளிகளால் இந்த நேரத்தில் தூங்க முடியாது. மூச்சு விட இயலாது சிரமப்படுவார்கள்.

காலை: 5 மணி முதல் 7 மணி வரை பெருங்குடல் இயங்கிக் கொண்டிருப்பதால் இந்நேரத்தில் கண்டிப்பாக எழுந்திருக்க வேண்டும்.

இந்த நேரத்தில் எழுந்திருப்பவர் களுக்குக் கண்டிப்பாக மலச்சிக்கல் இருக்காது. மலம் கழித்துக் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். அதனால் நரம்புத் தளர்ச்சி ஏற்படாது. “ விடியலில் எழுந்திருப்பவர், வாழ்க்கையில் தோற்றது இல்லை” என்பது மருத்துவப் பழமொழி. வாழ்வில் என்றும் அவர்களுக்கு வெற்றி தான் கிடைக்கும்.
 
காலை: 7 மணி முதல் 9 மணி வரை வயிறு இயங்கிக் கொண்டிருப்பதால் இந்நேரத்தில் கண்டிப்பாகக் காலை உணவை முடித்திருக்க வேண்டும்.
 
காலை: 9 மணி முதல் 11 மணி வரை மண்ணீரல் இயங்கிக் கொண்டிருப்பதால் மிகச்சிறிய சிற்றுண்டியோ, பானங்களோ அல்லது தண்ணீர் கூட இந்நேரத்தில் சாப்பிடக்கூடாது. அப்படிச் சாப்பிட்டால் மண்ணீரல் பாதிப்பு ஏற்பட்டு உடலில் வெப்பம் அதிகரிக்கும், மேலும் நாம் அந்நேரத்தில் உண்ணும் உணவு, நீர் ஆகியவைவ் வயிற்றில் சீரணிக்க நெடு நேரம் எடுத்துக் கொள்கிறது. உணவு சீரணித்தல் மண்ணீரலின் பங்கு பற்றி நமக்கு தெரிந்ததே. உணவு சாப்பிட்டதும் ஏற்படவேண்டிய சுறுசுறுப்பிற்கும், புத்துணர்விற்கும் பதிலாக அசதியும், தூக்கமும் இந்தநேரத்தில் அவர்களை ஆட்கொள்ளும். நாளடைவில் பசி குறையும். காலையில் யோகாசனப் பயிற்சிகளை முடித்தப்பின் சிலருக்கு மேற்படி குறிகள் அந்தநேரத்தில் தோன்றும் அதற்குக் காரணம் அவர்களுக்கு மண்ணீரல் செயல் இயக்கக் குறைவுதான் காரணம். நீரிழிவு நோயாளிகளுக்கும் தொந்தரவு அதிகரிக்கும் நேரம் இது. (படபடப்பு, மயக்கம், தூக்கக்கலக்கம் ஏற்படும் )

நண்பகல்: 11 மணி முதல் 1 மணி வரை இதயம் இயங்கிக் கொண்டிருப்பதால் கடினமான வேலையேதும் செய்யாமல் தண்ணீர் மட்டும் குடித்து உடலைச் சாந்தபடுத்திக் கொள்ளலாம். நகரத்தில் உள்ள எல்லாத் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் விழிப்புடன் இருக்கும் நேரம் இது. காரணம் இந்நேரத்தில் தான் இதய நோயளிகளுக்கும், சர்க்கரை நோயளிகளுக்கும் மாரடைப்பு ஏற்படும். தூங்காமல் இருக்க வேண்டும். அப்படித் தூங்கினால் அபானவாயு பிராணவாயுடன் கலந்து மாரடைப்பு ஏற்படுத்தும். அல்லது முகவாதம் அல்லது மூட்டுவாதம், உடல் வலிகள் நிச்சயம் தோன்றும்.

பகல்: 1 மணி முதல் 3 மணி வரை சிறு குடல் இயங்கிக் கொண்டிருப்பதால் மதிய உணவு முடித்து 3:5 நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வு எடுக்கலாம். படுத்து உறங்குவதை இந்நேரத்தில் தவிர்க்க வேண்டும்.

பகல்: 3 மணி முதல் 5 மணி வரை சிறுநீர் பை இயங்கிக் கொண்டிருப்பதால் பானங்களோ அல்லது தண்ணீரோ அருந்த உகந்த நேரம் இது. முதுகுவலி, இடுப்பு வலி வரும் நேரம்இது.

மாலை: 5 மணி முதல் 7 மணி வரை சிறுநீரகம் இயங்கிக் கொண்டிருப்பதால் வழக்கமான வேலைகளில் இருந்து விடுப்பட்டு இரவுக்கு முன்பாகவே வீடு வந்து சேரவேண்டும். ரீனல் பெயிலியர் முதல் நீர்க் கடுப்பு வரை ஏற்படும்.

இரவு: 7 மணி முதல் 9 மணி வரை இதய மேலுறை இயங்கிக் கொண்டிருப்பதால் இந்நேரத்திற்குள் கண்டிப்பாக இரவு உணவை முடித்திருக்க வேண்டும். மார்பு வலி, உடல் பாரம், படபடப்புத் தோன்றும்.

இரவு: 9 மணி முதல் 11 மணி வரை மூன்று வெப்ப மூட்டி இயங்கிக் கொண்டிருப்பதால் காலை முதல் மாலை வரை உழைத்து, களைத்த மனித உறுப்புகளுக்கு ஓய்வு தர வேண்டிய நேரம் இது, இந்நேரத்திற்குப் பின்பு கண் விழித்திருத்தலோ, படிப்பதோ கூடாது.

நடுநிசி: 11 மணி முதல் 1 மணி வரை பித்தப்பை இயங்கிக் கொண்டிருப்பதால் இந்நேரத்திற்குள் கண்டிப்பாகத் தூங்கி கொண்டிருக்க வேண்டும். இந்நேரத்தில் விழித்திருந்தால் அடுத்த நாள் உங்கள் முழுச் சக்தியையும் இழக்க நேரிடும்.

மிக அதிகாலை: 1 மணி முதல் 3 மணி வரை கல்லீரல் இயங்கிக் கொண்டிருப்பதால் இந்நேரத்திற்குள் ஆழ்ந்த நித்திரையில் இருக்க வேண்டும். இந்நேரத்தில் விழித்திருந்தால் கண்டிப்பாகக் கண்ணின் பார்வை சக்தி குறையும். உறக்கம் பாதிக்கும், உடல் அரிப்பு, நமைச்சல் அதிகரிக்கும்.

No comments:

Post a Comment