Monday 21 December 2015

டெலிபதியை அறிந்து கொள்ளுங்கள்

டெலிபதியை அறிந்து கொள்ளுங்கள் :

முதலில் உங்கள் எண்ண அலைகளுக்கு ஒத்த
எண்ண அலைகள் உள்ள ஒரு நண்பரை இதில்
உதவியாளராக சேர்த்துக் கொள்ளுங்கள்.

என்றுமே இது போன்ற விஷயங்களில்
ஈடுபாடோ, நம்பிக்கையோ இல்லாத
ஆள்களைத் தவிருங்கள். உங்கள் சோதனை சமயங்களில் பார்வையாளராகக் கூட அது
போன்ற ஆட்கள் அருகில் இருக்க அனுமதிக்க வேண்டாம். இது ஆரம்பக் கட்டங்களில் மிகவும் அவசியம். இதில் நல்ல தேர்ச்சி
அடைந்த பின்னர், உங்கள் ஆழ்மன சக்திகள்
வலிமை அடைந்த பின்னர் மற்றவர்களின்
எப்படிப்பட்ட எதிர்மறை எண்ண அலைகளும்
உங்களையும், உங்கள் சக்தியையும்
பாதிக்காது. ஆனால் அந்த நிலையை
அடையும் வரை ஒத்த எண்ண அலைகள் உள்ள
மனிதர்கள், சூழ்நிலைகளே சோதனைக்கு
உகந்தவை.

பரபரப்பில்லாத அமைதியான மனநிலையே
ஆழ்மன சக்திகள் வெளிப்படப் பொருத்தமான
மனநிலை. சரியாகச் சொல்ல முடிய
வேண்டுமே என்ற பரபரப்போ, முடியுமா என்ற
சந்தேகமோ மனதில் வேண்டாம். முதலில்
எளிமையான சோதனையில் இருந்து
ஆரம்பியுங்கள்.

நண்பரிடம் ஒன்றில் இருந்து
பத்திற்குள்ளாக ஒரு எண்ணை நினைக்கச்
சொல்லுங்கள். அவரை அந்த எண்ணை
அவருடைய மனத்திரையில் பெரியதாக
உருவாக்கி ஒளிரச்செய்து காணச்
சொல்லுங்கள். பின் கண்களை
மூடிக்கொண்டு உங்கள் மனத்திரையில் அவர்
கண்டு கொண்டு இருக்கும் எண்ணைக் காண
முயற்சி செய்யுங்கள். அந்த எண் உங்கள்
மனத்திரையில் ஒளிர வேண்டும் என்று
எதிர்பாருங்கள்

இந்த முயற்சியில் நீங்கள் உங்களை
அறியாமலேயே யூகம் செய்ய முயற்சிக்கக்
கூடும். நண்பருக்குப் பிடித்த எண் எது,
அவரது அதிர்ஷ்ட எண் எது என்று யூகிக்கத்
தோன்றலாம். அதைத் தவிருங்கள். யூகத்தின்
மூலம் சரியான எண்ணைச் சொன்னாலும் நம்
நோக்கத்திற்கு அது தோல்வியே. ஓரிரு
நிமிடங்கள் கழித்து உங்கள் மனத்திரையில்
பெரிதாக ஒளிர ஆரம்பிக்கும் எண்ணை,
அல்லது உறுதியாக மேலோங்கி நிற்கிற
எண்ணை வாய் விட்டு அவரிடம்
சொல்லுங்கள். சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

90 சதவீதம் ஆரம்பத்தில் தப்பாகச் சொல்ல
வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால்
அந்த எண் ஆழ்மனதின் முயற்சியின் மூலம்
தானாக வரும் முன், பொறுமையில்லாமல் நம்
ஆர்வக் கோளாறு ஒரு கற்பனை எண்ணை நாம்
வரவழைக்கச் செய்திருக்கலாம்.
முதல் முயற்சியிலேயே குழந்தை நடக்க
ஆரம்பித்து விடுவதில்லை. எனவே தளராமல்
உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள்.

எண்கள் மட்டுமல்லாமல், காய்கறிகள், பழங்கள்,
பொருள்கள், உங்கள் இருவருக்கும் நன்றாகத்
தெரிந்த மனிதர்களின் முகங்கள், ஏதாவது ஒரு
துறையின் பிரபலங்கள் என்று மாற்றிக்
கொண்டு முயற்சியுங்கள். யூகம், அவசரம்,
சரியாகச் சொல்ல வேண்டும் என்கிற
படபடப்பு போன்றவை இல்லா விட்டால்
விரைவிலேயே உங்களால் சரியாகச் சொல்ல முடியும்.

தோல்வியைப் போலவே வெற்றியும் நம்
மனநிலையைப் பாதிக்கக் கூடும். அப்படி
வெற்றி தோல்விகள் ஏற்படுத்துகிற மாறுதல்
மனநிலைகளைத் துடைத்து விட்டு
மறுபடியும் புதிதாக ஆரம்பியுங்கள்.
களைப்பான சமயங்களும் இந்த சோதனைக்கு
உகந்ததல்ல. அந்த நேரங்களிலும் சோதனை
செய்வதைத் தவிருங்கள்.
அது போல உங்களுக்கு மிக நெருங்கியவர்கள்
ஏதாவது சிந்தனையில் இருக்கையில்
அவர்களிடம் கேட்காமலேயே அதை உங்களால்
உணர முடிகிறதா என்று முயற்சி
செய்யுங்கள். முன்பு சொன்னது போல
யூகம், கற்பனை இரண்டின் வழியாக
அல்லாமல் தானாக மனதில் வந்து சேரும்
வரை பொறுமையாகக் காத்திருங்கள். தானாக
விடை ஏதும் வரா விட்டால் விட்டு
விடுங்கள். கட்டாயப்படுத்தி வரவழைக்க
நினைக்கும் விடைகள் சரியாக
இருப்பதில்லை. ஒரு விடை மனதில்
உறுதியாகத் தோன்றினால் விடை சரி தானா
என்று அவர்களிடம் கேட்டு சரிபாருங்கள்.
தவறாக இருந்தால் அதைப்
பொருட்படுத்தாதீர்கள். இது ஒன்றும் உங்கள்
வாழ்வை நிர்ணயிக்கும் பரீட்சை அல்ல.

அடிக்கடி முயற்சி செய்யுங்கள். போகப் போக
நீங்கள் அந்த உணரும் சக்திக்கு 'ட்யூன் ஆக'
ஆரம்பிப்பீர்கள். பின் நீங்கள் இந்தத் திறனில்
வெற்றி பெறுவது அதிகரிக்க ஆரம்பிக்கும்.
அடுத்ததாக நீங்கள் உங்கள் எண்ணத்தை
அடுத்தவருக்கு அனுப்புவது பற்றிய
சோதனையை ஆரம்பியுங்கள்.

ஆரம்பத்தில்
எளிய சோதனைகளையே ஆரம்பியுங்கள்.
உதாரணத்திற்கு தெருவில் நடந்து
கொண்டிருக்கும் போது முன்னால் போகும்
நபர் திடீரென்று உங்களைத் திரும்பிப் பார்க்க
வேண்டும் என்று உறுதியாக எண்ணுங்கள்.
அவரது பின் கழுத்தில் உங்கள் பார்வையைப்
பதித்து ஆழமாக எண்ணுங்கள். அவர் திரும்பிப்
பார்க்கிறாரா என்று பாருங்கள். உங்களிடம் பேச
வரும் நபர் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு
சொல்லை அல்லது ஒரு விஷயத்தைப் பற்றி
கண்டிப்பாக உங்களிடம் சொல்ல வேண்டும்
என்று உறுதியாக, ஆழமாக எண்ணுங்கள்.
நீங்கள் நினைக்கிறபடி அந்த நபர் நடந்து
கொள்கிறாரா, சொல்கிறாரா என்று பாருங்கள்.
அப்படி நடக்கா விட்டால் அது உங்களின்
சக்தியின் குறைபாடாக இருக்க
வேண்டியதில்லை. வேறு காரணங்கள் கூட
இருக்கலாம். உங்கள் முன்னால் போய்க்
கொண்டிருக்கும் நபர் தன்னைப் பாதிக்கும்

ஏதோ ஒரு விஷயத்தில் ஆழ்ந்து
போயிருக்கலாம். ஆழ்ந்த சிந்தனையில்
ஆழ்ந்து போய் இருக்கிற நபரை அந்த
சிந்தனையில் இருந்து வெளியே வர வைத்துப்
பின் திரும்ப வைப்பது மிகவும் சக்தி படைத்த
ஒருசிலரால் மட்டுமே முடியும். ஓரளவு
சக்தி பெற்றவர்களாலும் கூட அது முடியாது.
அது போல ஒரு விஷயத்தில் ஆழ்ந்து போய்
அதைப் பற்றி உங்களிடம் பேச வரும் ஒரு
நபரை சம்பந்தமில்லாத விஷயத்தையோ,
அதற்குப் பொருத்தமில்லாத வார்த்தையையோ
சொல்ல வைப்பதும் கடினமே. ஆகவே இது
போன்ற சமயங்களில் முன்பே ஏதோ
சிந்தனையிலோ, கவலையிலோ,
வேலைப்பளுவிலோ மூழ்கி இருப்பவர்கள்
இந்த சோதனையில் ஈடுபடுத்தப்
பொருத்தமானவர்கள் அல்ல என்று புரிந்து
கொள்ளுங்கள்.

இது போல பல சோதனைகளை நீங்களே
தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உருவாக்கிக்
கொள்ளலாம். வீட்டில் உள்ளவர்களைக் கூட
வாய் விட்டுச் சொல்லாமல் உங்கள்
எண்ணங்கள் மூலம் இயக்க முடிகிறதா என்று
பாருங்கள். இதிலும் அது அந்த நபருக்கு
இசைவில்லாத செயல்களைச் செய்ய
வைக்கும் முயற்சியாக இல்லாமல்
இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த சோதனைகள் சுவாரசியமானவை.

இதில் கிடைக்கும் வெற்றி தோல்விகளுக்குப் பெரிய
முக்கியத்துவத்தைத் தராதீர்கள். சற்று முன் விளக்கியபடி தோல்விகளுக்கு உங்கள்
ஆழ்மனசக்திக்கு சம்பந்தமில்லாத வேறு
காரணங்கள் இருக்கக் கூடும். அதையும்
அலசுங்கள்.
போகப் போக உங்கள் முயற்சிகளில் வெற்றிகள்
அதிகரித்துக் கொண்டே போவதை நீங்கள்
காண்பீர்கள்.

ஆனால் இந்த சோதனைகள்
குறித்தும், நீங்கள் அடைந்த வெற்றிகள்
குறித்தும் மற்றவர்களிடம் சொல்வதையோ,
அலசுவதையோ தவிர்ப்பது நல்லது.

No comments:

Post a Comment