Saturday 12 December 2015

குல தெய்வ வழிபாடு - 8

குல தெய்வ வழிபாடு  - 8

 8
குலதெய்வ வழிபாடு  என்பது இன்று நேற்றல்ல, மகாபாரத  மற்றும் இராமாயண  காலங்களில் இருந்தே நடைமுறையில்  இருந்துள்ளது என்பதும்,  தெய்வங்கள் எப்படி தம்மை தானாகவே வெளிப்படுத்திக்  கொள்ளும் என்பதற்கும் பல புராணக் கதைகள் உள்ளன.

மகாபாரத யுத்தம் முடிந்து தர்மர் ஆட்சியில் அமர்ந்தார்.  அவர் சுமார் 36 ஆண்டுகள் நாட்டை  ஆண்டு வந்தார். அவர்கள் ஆட்சியில் அமர்ந்ததும் கிருஷ்ணர் துவாரகைக்கு சென்று விட்டார். அப்படி இருக்கையில் ஒருநாள் தர்மர் ஆட்சியில் இருந்தபோது அவர்கள் கிருஷ்ணர் இவ்வுலகை விட்டு தன்னை நீக்கிக் கொண்டார் என்ற செய்தியைக் கேட்டு துயர் அடைந்தார்கள். கிருஷ்ணர் இன்றி  இனி தமக்கும் இந்த உலகில் வாழ அருகதி இல்லை என துயரம் கொண்டவர்கள் அவர்களது ராஜ்யத்தை அர்ஜுனனின் பேரனான பரிஷித்திடம் ஒப்படைத்து விட்டு தாங்களும் சிவபெருமானின் பாதங்களுடன் கலந்து சிவலோகப் பிராப்தி அடைந்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு தமது வாழ்க்கையை முடித்துக் கொள்ள இமயமலையை நோக்கி பயணம் செல்லத் துவங்கினார்கள். அவர்கள் அனைவருமே  ஆராதித்து வழிபாட்டு வந்திருந்தது சிவபெருமானே என்பதினால் சிவபெருமான் அவர்களுடைய வம்சத்துக்கு குல தெய்வமாகவே   இருந்தார்.


அவர்கள் இமயமலையை அடைந்தபோது அடர்ந்த காடுகளைக் கடந்து செல்ல வேண்டி இருந்தது.  அவர்கள் சென்று கொண்டிருந்த பாதை  அடர்ந்த காடு என்பதினால் தடம் மாறிச் சென்று மிருகங்களிடம் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது என்ற கவலை அடைந்த சிவபெருமான்  அவர்கள் எப்போதெல்லாம் தவறான வழியில் நுழைய இருந்தார்களோ அப்போதெல்லாம் அந்த  தவறான பாதையை அடைப்பது போல மலையில் இருந்து உருண்டு விழும் பெரிய பாறைக் கல்லைப் போல விழுந்து அந்த பாதையை அடைந்துக் கொண்டு நின்றவாறு  அவர்கள்  மாற்று வழியில் செல்ல வழி வகுத்துக் கொண்டே இருந்தார்.

நடப்பது என்னவென்பதை அறியாமல்  'இதென்னடா மலை மீது இருந்து மீண்டும் மீண்டும் பாறை உருண்டு விழுந்து கொண்டிருந்தவாறு பாதையை மறைக்கிறதே' என தவறாக எண்ணிய பாண்டவ சகோதரர்கள் அந்த கற்பாறையை  தவிர்த்து விட்டு வேறு வழியில் நுழைந்து நடந்து   கொண்டே இருந்தார்கள். அப்படியாக நடந்து கொண்டிருந்தபோது ஒருநாள் அவர்கள் நுழைய இருந்த தவறான பாதையை தடுக்க வேண்டும் என்ற நினைப்பில் மீண்டும்  சிவபெருமான் தன்னை மீண்டும் ஒரு பெரிய கல்லாக மாற்றிக் கொண்டு மேலிருந்து உருண்டு விழுந்து அவர்கள் சென்று கொண்டு  இருந்த பாதையை மறைந்து நின்றார்.

சிவபெருமானே உருண்டு விழுந்த 
பாறைகளாகி  பாதையை மறைத்தவாறு நின்றார் 

தனது சகோதரர்கள் மற்றும் திரௌபதியுடன் நடந்து கொண்டிருந்த பீமன் மேலிருந்து விழுந்த பாறைக் கண்டு கோபமுற்றார்.  தன்னை மறந்து கோபத்தில் அந்த பாறையை பிளக்க தனது கதையை ஓங்கியபோது அவர்கள் முன் சிவபெருமான் பிரசன்னமானார்.  தமது தவறை உணர்ந்த பீமனும் அவரது சகோதரர்களும் அப்படியே கீழே விழுந்து சிவபெருமானை நமஸ்கரித்து அவரிடம் மன்னிப்புக்  கேட்டார்கள். தமக்கு முக்தி தருமாறு அவரிடம் வேண்டினார்கள். அவர்கள் முன் தோன்றிய சிவபெருமான் அவர்களுக்கு முக்தி தந்தப் பின் அங்கேயே சிவலிங்க உருவமாக மாறினார். அப்போது  பூர்வ ஜென்மத்தில் சாபம் பெற்று பூமியில் பிறந்து இருந்த திரௌபதி  சிவபெருமானைக் தரிசித்தவுடன் சாப விமோசனம் பெற்று அப்படியே மறைந்து போக பாண்டவ சகோதரர்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள். அவர்களை தேற்றிய சிவபெருமானும் அவர்களுக்கும்  சிவலோக பிராப்தி தந்தார். அடைந்து அது மட்டும் அல்ல இனி பாண்டவர்கள் வம்சத்தை சேர்ந்த பின் வழி வம்சத்தினர் திரௌபதியை அவர்களது  குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு வாழ்வார்கள் என்ற அருளும் புரிந்தார்.  இப்படியாக அவர் அவர்களுக்கு காட்சி தந்த இடமே கேதார்நாத் ஆலயமாகும்.  அது மட்டும் அல்லாமல் அவர்களை சென்ற வழியை  மறைத்துத் கொண்டு தடுக்க அவர் எடுத்த உருவமான கற்கள் எல்லாம் அங்காங்கே சிவலிங்கம் ஆயின. அங்கெல்லாம் சிறிய ஆலயங்களும்  எழுந்தன.  இன்னும் சில கதையின்படி சிவபெருமானை தேடி அலைந்த பாண்டவர்களுக்கு சிவபெருமான் மாடாக காட்சி தர அவரை அடையாளம் கண்டு கொண்ட பீமன் அந்த மாட்டைப் பிடித்து அப்படியே பூமியில் அழுத்த அவனிடம் இருந்து தப்பிய மாட்டு உருவில் இருந்த சிவபெருமான் அங்கேயே சிவலிங்கமானார். அதுவே கேதார்நாத் சிவலிங்கம் என்றும் கூறுகிறார்கள்.

இப்படியாகவே தெய்வங்கள் தாம் எங்கெங்கு  தெய்வமாக அமர்ந்திருக்க வேண்டும் என நினைத்தனவோ அங்கெல்லாம்  தமக்கு  ஒரு ரூபத்தை எடுத்தன. அந்தந்த இடங்களில் அவர்களை ஆராதித்த வம்சங்களின் குல தெய்வம் ஆயின.

நிற்க பாண்டவர்கள் மறைந்தப் பின் அவர்களுக்கு இலங்கையில் மட்டக்கிளப்பு அருகில் உள்ள பாண்டி இருப்பு எனும் கிராமத்தில் ஒரு வழிபாட்டுத் தலமும்  அமைந்தது. அதை தாதன் கோவில் என்கிறார்கள்.  அந்த ஆலயம் எழும்பும் முன்னர் ஒரு காலத்தில் ஐந்து  சன்யாசிகள் ஒன்று சேர்ந்து கதிர்காமன் ஆலய தரிசனத்துக்காக இலங்கைக்கு சென்று கதிர்காமனில் வழிபாட்டை முடித்துக் கொண்டு திரும்பி வந்து கொண்டு இருந்தபோது ஒவ்வொருவரும் வழியில் இருந்த ஒவ்வொரு கிராமத்தில் தங்கி விட்டார்கள். அப்படி தங்கிய ஐந்து கிராமங்களில் அவர்கள் தமது குல தெய்வ வழிபாட்டிற்காக  சிறு கோவிலைப் போன்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு அந்த கிராமத்தில் இருந்தவர்களுக்கு குல தெய்வ வழிபாட்டின் மேன்மையை விளக்கிக் கூறி குல தெய்வ வழிபாட்டை ஏற்க வைத்தார்கள்.  இப்படியாக ஒவ்வொரு இடத்திலும் ஐந்து ஆலயங்களை நிறுவிய ஐவரில் ஒரு சன்யாசி பாண்டி இருப்பிலும் திரௌபதியின் ஆலயத்தை நிறுவ அங்கிருந்த கிராம மக்களினால் திரௌபதியே குல தெய்வமாக ஏற்கப்பட்டாள். அவர் பாண்டவ வம்சத்தை சேர்ந்தவராம். இப்படியாக திரௌபதியை தெய்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் எழுப்பிய ஆலயங்கள் பிற இடங்களிலும் தொடர்ந்தது. பின் வழி பாண்டவர்களின் பரம்பரையினர் தமிழ்நாடு, பெங்களுர் போன்ற பல இடங்களிலும் திரௌபதியின் ஆலயங்களை எழுப்பி உள்ளார்கள். அவளை குல தெய்வமாக வணங்குகிறார்கள்.

இதை கூறியதின் காரணம் பண்டைக் காலம் முதலேயே குல தெய்வங்கள் எப்படி ஏற்பட்டன மற்றும் தெய்வ உருவங்கள் எப்படி ஸ்வயமாக எழுந்துள்ளன என்பதை எடுத்துக் காட்டவே.

 திரௌபதி அம்மன் ஆலயம் 

திரௌபதி அம்மன்

குல தெய்வ வழிபாட்டை மனித உருவில் இருந்த தெய்வங்கள் கூட கடை பிடித்து வந்துள்ளன என்பதை வால்மீகி ராமாயணத்தில் காணலாம். ராவணனைக் கொன்ற பின் அயோத்தியாவுக்கு திரும்பிய ராமபிரான் விபீஷணனை இலங்கையின் அரச பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு கட்டளை இட்ட பின்னர் இப்படியாகக் கூறினாராம் "விபீஷணா, ராவணனது ராஜ்யத்தில் கடைசி பிரஜைகள் உள்ள வரை நீயும் அதே இலங்கையில் இருப்பாய். இந்த பிரபஞ்சத்தில் சந்திர, சூரியன் உள்ளவரை, என் புராணம் உலகில் நிலவும் வரை, நீயும் உன்னுடைய ராஜ்யத்தில் ஸ்திரமாக இருந்தவாறு கடைசிவரை ராஜ்ஜியத்தையும் நல்லமுறையில் ஆண்டு கொண்டு இருப்பாய். இந்த கட்டளையை தட்டாமல் நீ ஏற்றுக் கொள்ள வேண்டும். பிரஜைகளை நெறி தவறாது நீதி பாலனம் செய். ராக்ஷஸ ராஜனே, நீ இக்ஷ்வாகு குல தெய்வமான ஜகந்நாதனை மறந்திடாமல் எப்பொழுதும் ஆராதனை செய்து வர வேண்டும். அவரே எங்கள் குல தெய்வமும் ஆகும்.'' 
.........தொடரும்

No comments:

Post a Comment