Saturday 12 December 2015

குல தெய்வ வழிபாடு - 7

குல தெய்வ வழிபாடு  - 7

7
குலதெய்வ வழிபாட்டில் பல்வேறு தெய்வங்கள் உள்ளன. அவற்றில் ஆண்  மற்றும் பெண் தெய்வங்கள் என்று பார்த்தால் ஆண்களை விட பெண் தெய்வங்களே  அதிகம் உண்டு.  ஆண்களை விட பெண் தெய்வங்களில் அதிக அவதார தெய்வங்கள்  உண்டு. அதன் காரணமும் புராணங்களில் இருந்து அறிந்திடலாம். எந்த ஒரு யுத்தத்திலும் ஆண் தெய்வத்தை விட அதிகமாக யுத்தங்களில் பங்கேற்றவை பெண் தெய்வங்கள் ஆகும். தேவலோகத்தை துன்புறுத்தி வந்த, ரிஷி முனிவர்களுக்கு தொல்லைக் கொடுத்து வந்திருந்த பல அரக்கர்களையும் அசுரர்களையும் அழித்தது பெண் தெய்வங்களே. அவை பல ரூபங்களை எடுத்து யுத்தம் செய்துள்ளன. அதன் காரணம் ஆண்  தெய்வங்களை விட பெண் தெய்வங்கள் அதிக சக்தி வாய்ந்தவை என்பதாகும். யோக சக்தி நிறைந்தவை. மாந்த்ரீக சக்தி கொண்டவை. இதன் காரணம் பரப்பிரும்மனின் மூல சக்தியே பெண் சக்தியாகும். அதுவே ஒரு தாயாரைப் போல படைப்பைக் கொடுக்க வல்லது என்பது பரப்பிரும்ம  தத்துவம்.

இதற்கான உதாரணங்கள் காளி தேவி, மஹிஷாசுர மர்தினி,  தசவித்தியாவின் பத்து தேவிகள், சப்த கன்னிகைகள்,  அஸ்வாரூடா தேவி,  துர்க்கை, ஜ்வாலமுகி, சின்னமஸ்தா, சாமுண்டா, வைஷ்ணவி போன்றவை. அறுபத்தி நான்கு யோகினிகள் என்ற தந்திர மந்திர சக்தி படைத்த தெய்வங்களும் யுத்தங்களில் பங்கேற்றுள்ளர்கள். அவர்கள் ஆலயம் ஒரிஸ்ஸா மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ளது. அதனால்தான் குல தெய்வங்களிலும், கிராம தெய்வங்களிலும் அதிக பெண் தெய்வங்கள் உள்ளதைப் பார்க்கலாம்.
 

சிவன் என்று பார்த்தால், அவருக்கு நூற்றுக்கணக்கான பெயர்கள் மற்றும் அவதாரங்கள் இருந்தாலும் கூட உருவம் எனும்போது சிவலிங்கம், தத்தாத்திரேயர், ருத்திரன், பைரவர், தக்ஷிணாமூர்த்தி  போன்ற மிகக் குறைந்த அளவிலான உருவங்கள் மட்டுமே உண்டு. ஸ்வேடஸ்வதார உபநிஷத் என்பதில் சிவபெருமானுக்கு நான்கு அவதாரங்கள் மட்டுமே உள்ளதாக கூறப்பட்டு உள்ளது  என்றாலும் அவருக்கு பத்தன்பொது (19)  அவதாரங்கள் உள்ளன என்று பிற நூல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவருக்கு உருவம் எனும்போது மேல் கூறப்பட்ட ஐந்து ரூபங்களே பூஜிக்கப்படும் உருவில் உள்ளன.   அது போல விஷ்ணுவின் ரூபமும் தசாவதார  உருவங்களைத்  தவிர  ராமர், கிருஷ்ணர், வெங்கடசலபதி, நரசிம்மர் போன்றவர்களே மனதில் வருவார்கள்.

 ஆனால்  பெண் தெய்வங்களை எடுத்துக் கொள்ளுங்கள். பார்வதியின் அவதாரமே லஷ்மி மற்றும் சரஸ்வதி என்று கூறப்பட்டாலும் பார்வதியின் பல உருவங்களும், ரூபங்களும், அவர் உடலில் இருந்து வெளிவந்த சக்தி தேவிகளும்   அங்காள  பரமேஸ்வரி, மாரியம்மன்கள், தச வித்யாவில் காணப்படும் பல ரூபங்களைக் கொண்ட தேவிகள், காளி  தேவி, துர்க்கை, மஹிசாசுரமர்தினி, சாமுண்டா, கோலவிழி அம்மன், முண்டைகண்ணி அம்மன், சயயபுரம் அம்மன், அகிலாண்டேஸ்வரி, பச்சையம்மன், பச்சைவாழியம்மன், லலிதாம்பிகை என நூற்றுக்கணக்கான உருவங்களைக் கூறலாம்.  எந்த ஒரு பெண் தெய்வத்தை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் பெரும்பாலும் பார்வதியின் அவதாரங்களாகவே இருக்கிறார்கள். 

பார்வதி தேவியின் பல்வேறு அவதாரங்கள் , கணங்கள்

விஷ்ணு  புராணம் மற்றும் தேவி பாகவதம் போன்றவை மனுவின் வாழ்வும் அவருடன் படைப்பெடுத்த அனைத்து தேவ கணங்களும் மடிந்து புதிய பிறப்பு எடுப்பார்கள் என்பதாகக் கூறுகின்றன. அதன்படி பிரும்மாவே பிறந்து, அழிந்து, மீண்டும் பிறப்பு எடுப்பவராம். நான்கு யுகங்களே ஒரு சதுர யுகம் என்பதாகும். அப்படியாக 71 சதுர்யுகம் முடிந்ததும் ஏற்படும் பிரளய காலத்தில் பிரும்மாவும், அவருடன் படைப்பு பெற்ற அனைத்து தேவ கணங்களும், அதில் உள்ள தேவலோக அதிபதியான பன்னிரண்டு பிறவிகள் எடுத்திருந்த இந்திரன்  உட்பட அனைவரும் அழிவார்கள், மறு பிறப்பு எடுப்பார்கள் என்கிறது. இது எடுத்துக் காட்டுவது என்ன புரிகிறதா?


மீண்டும் மீண்டும் பரப்பிரும்மம் படைப்பை எடுப்பதில்லை, அவரால் பிறப்பிக்கப்பட்ட பிரும்மா மட்டுமே மரணத்தை அடைகிறார்.  பிரும்மாவினால் படைக்கப்பட்ட கடல்  பிரளயத்தை ஏற்படுத்தும். அந்தப் பிரளயம்தான் அவருக்கு மரணத்தை சம்பவிக்கின்றது என்பதினால் பிரளயத்தைத் தரும் கடலும் அழியவில்லை, பூமியும் அழியவில்லை.  அனைத்து தேவலோகப் படைப்புக்கள்  மட்டுமே அழியும் என்பதில் இருந்து அந்த பிறப்புக்கள் எதோ ஒரு உருவில் இருந்து அழிந்துள்ளன என்பது புரியும்.  அவை யுக யுகமாக கல்லாகிப் போய் புதைந்து கிடக்க,  பின்னர் வந்த யுகத்தில் அவை கண்டெடுக்கப்படுகின்றன, வழிபடப்படுகின்றன. அவையே தெய்வங்களுக்கு பல்வேறு யுகங்களில் இருந்த உருவங்களைக் காட்டின. மீண்டும் யுக முடிவில் மறைகின்றன.  இது வண்டிச் சக்கரம் போலத் தொடர்கின்றன.

அவை எப்படி வெளித் தெரியலாயின? ஒன்று தாமாகவே பூமியில் இருந்து வெளி வந்து அமர்ந்தன. இல்லை யாராவது ஒருவர் கனவில் வந்தோ, நேரில் தோன்றியோ தான் இன்னென்ன இடத்தில் உள்ளதாக தெரிவித்து அவர்கள் மூலம் கண்டெடுக்கப்பட்டன? இல்லை ரிஷி முனிவர்கள் மூலம் தெரிய வந்தன.   இதைக் குறித்து  ரஹஸ்யஸ்துதி என்ற நூலில்  பிரும்ம ரிஷி நாரதருக்கு  ஸ்ரீமான் நாராயணன் கூறியதான கதை உள்ளது என்று சில பண்டிதர்கள் கூறுகிறார்கள்.

பல செய்திகளும் பரம்பரை பரம்பரையாக கூறப்பட்டு வந்துள்ள வாய்வழி செய்திகளாகவே கதைகள் மூலம் கூறப்பட்டு வருகின்றன. அதன் காரணம் அந்த காலத்தில் எழுதுகோல் மற்றும் சாதனங்கள் இருந்திடவில்லை. சில வாய் மொழி செய்திகள் மன்னர்கள் ஆண்ட காலத்தில் கல்வெட்டில் செதுக்கப்பட்டு உள்ளன. அவற்றைத் தவிர ஓலைகளில் எழுதப்பட்டிருந்த பல செய்திகளும் பல நூல்களும் அழிந்து விட்டதும் அவற்றின் இன்னொரு காரணமாக இருக்கலாம். இப்படியாக புராணக் கதைகளைக் கொண்ட பல அற்புதமான படைப்புக்கள் மற்றும் செய்திகள் அதிசயமாக இலங்கையில் இருந்துள்ளன. அதன் காரணம் தெரியவில்லை.  முக்கியமாக சிவன் மற்றும் முருகனைக் குறித்த புராணங்கள் அதிகமாக இலங்கையில் காணப்படுகின்றன.  ஆனால் அவற்றில் பல நூல்கள் நூலகங்களில் கூட கிடைப்பது  இல்லை.
 
நாரத முனிவருக்கு விஷ்ணு 
பகவான் அருளுரை

அந்த காலத்தில் எல்லாம் ஆலயம் என்பது தற்கால ஆலயங்களைப் போல பெரிய கோபுர மற்றும் கட்டிட அமைப்பில் அமைந்திருக்கவில்லை. தெய்வங்கள் மரங்களின் அடியில் திறந்த வெளியில் சிலை வடிவிலோ அல்லது ஏதாவது உருவ அமைப்பிலோ இருந்துள்ளது. அவற்றை இன்ன தெய்வம் என கற்பனை செய்து கொண்டு (சிலருக்கு சாமி ஆடுவதில் இப்படியான எண்ணம் வந்துள்ளது) வழிபட்டு வந்துள்ளார்கள். இல்லை என்றால் யார் மூலமாவது இன்ன, இன்ன தெய்வம் இங்கு குடி உள்ளது என்ற செய்தி பரவி அந்த சிலை வடிவே அந்த தெய்வத்தின் வடிவு என்றும் நம்பப்பட்டு அதுவே குல தெய்வத்தின் வழிபாட்டுக்குரிய இடம் எனவும் ஆயிற்று. அப்படி அவர்கள் வழிபட்ட இடங்கள் பின்னர் சிறு வழிபாட்டுத் தலங்களாக உருவெடுத்தன.

உதாரணத்துக்காக  கூற வேண்டும் என்றால் இதே பின்னணியில்தான் எங்கள் குல தெய்வமான சித்தாடி காத்தாயி அம்மனின் கதையும் உள்ளது.   நன்னிலம் எனும் கிராமத்தின் அருகில் உள்ள சித்தாடி எனும் கிராமத்தில் ஓடிய முடிகொண்டான் எனும் நதியில் மிதந்து வந்த வள்ளி தேவியான காத்தாயியின் சிலை ஒரு முனிவருக்குக் கிடைக்க அவர் எழுப்பிய மரத்தடியில் இருந்த வழிபாட்டு இடம் இன்று பெரிய ஆலயமாகிவிட அந்த ஆலயத்தில் எழுந்தருளி இருக்கிறாள் வள்ளி தேவி. அவளே சித்தாடி கிராம மக்களுக்கு குல தெய்வமானாள். ஒரு காலத்தில் அந்த கிராமத்தில் மற்றும் அதை சுற்றி இருந்த இடங்களில் குடியிருந்தவர்கள் அந்த காத்தாயி அம்மனை குல தெய்வமாக வைத்துக் கொண்டு வழிபாட்டு வந்துள்ளார்கள். அது பரம்பரைப் பரம்பரையாக தொடர்கிறது.

சித்தாடி கிராமத்திலும்  மற்றும் அதன் அக்கம்பக்கத்திலும்  பண்டைய காலத்தை சேர்ந்த சில  காத்தாயி அம்மன் ஆலயங்கள் உள்ளன. இது  எடுத்துக் காட்டுவது என்ன என்றால் விஷ்ணு பகவானின் புதல்வியான  சுந்தரவல்லி எனும் வள்ளி தேவியானவள் முருகனை மணக்க வேண்டும் என்பதற்காக அந்த இடத்து பூமியில் வந்து தவமிருந்து  சாப விமோசனம் பெற்று இருக்கிறாள்.  அதனால்தான் அவள் கல்லாகிக் கிடந்த சிலை, நதியில் மூழ்கிக் கிடந்துள்ள சிலை பின்னர் அங்கேயே கிடைத்து, எங்கே அவள் தவம்  இருந்திருந்தாளோ  அதே இடத்தில்  அமைந்த ஆலயத்தில் சிலையாகி நிற்கிறாள்.
 
வள்ளி தேவி மற்றும் 
காத்தாயி அம்மன்

இதில் ஒரு வேதனை என்ன என்றால் அந்த காலத்தில் வள்ளி தேவி மற்றும் அவளை மணந்து கொண்ட முருகப் பெருமான் குறவர்கள் இனத்துடன் தொடர்ப்பு கொண்டு இருந்ததினால் அந்தப் பழக்குடி மக்களில் வாழ்ந்திருந்த முருகனையோ அல்லது வள்ளியையோ மனதார குல தெய்வமாக ஏற்க  சிலருக்கு தயக்கம் இருந்தது. அவர்களை ஆகம வழியில் பூஜிக்கப்படாத தெய்வங்கள் என நினைத்தார்கள். ஆனால் அதே முருகனை சமிஸ்கிருத மொழியில் ஸ்கந்தன் என்றால் அதை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொண்டார்கள்.  இந்த நிலை அந்தணர் மற்றும் அந்தணர் அல்லாதவர்கள் இடையே நிலவிய பேதத்தினால்  இன்னும் அதிகமாகியது.

கார்த்திகேயர்

வடநாட்டு ஸ்கந்த முருகன்   
  
Valli Teyvanai Samedha Sri Murugan

தமிழ் முருகன்   வள்ளி-தெய்வானையுடன்
                                                                                                                       
இந்த பூமியிலே நடைபெறும் தெய்வ சம்மந்தப்பட்ட அனைத்து  நிகழ்வுகளுமே  குறிப்பிட்ட காரணங்களைக் கொண்டவை.  மனிதர்களைப் படைத்ததும், அதே தெய்வங்களைப் படைத்ததும்  ஒரே பரப்பிரும்மனே என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நான் ஏற்கனவே  எடுத்துக் காட்டி உள்ளதைப் போல ஒவ்வொரு வம்சத்துக்கும் பிரும்மனால் ஒவ்வொரு தெய்வ வழிபாடு தரப்பட்டு உள்ளது. அதை மனதார ஏற்றுக் கொள்வதே அவசியம். அவர்கள் வழி மூலமே வாழ்வுக்கு தேவையான அருள் கிடைக்கும் என்பது விதியாக இருக்கும்போது அலை பாயும் மனதுடன் இருப்பது ஏன்? இதை புரிந்து கொண்டால் மனம் தெளிவடைந்து விடும். 

 அந்த காலங்களில் வழிபடப்பட்ட தெய்வத்தின் சிலைகள் சில ஸ்வயம்புவாக தோன்றியவை, யாராவது ஒருவரால் எங்காவது கண்டு பிடிக்கப்பட்டு எடுத்து வந்தவை. இன்னும் சில மரங்களில் அடியில் வெறும் கற்களாக இருந்தவை. அதன் மீது ஒரு உருவம் வரையப்பட்டு இன்ன இன்ன தெய்வம் என்று கூறப்பட்டு பூஜிக்கப்பட்டு வந்தவை என்பதெல்லாம் பிரும்ம நியதியினால் நிகழ்ந்தவையே ஆகும் .வெகு காலத்துக்குப் பிறகு தெய்வத்தின் வடிவமைப்பு தோன்றத் துவங்க, அந்த உருவங்கள் ஆராதிக்கப்பட்டு, அதே உருவிலான தெய்வ சிலைகள் பல ஆலயங்களிலும் வழிபாட்டுத் தலங்களிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இதன் காரணம் தெய்வங்களின் உருவ அமைப்பு ரிஷிகள் மூலம் மற்றும் முனிவர்கள் மூலமே வாய் மொழியாக கூறப்பட்டு அவர்கள் கூறிய வடிவமைப்பில் வெகு காலத்துக்குப் பிறகே சிற்ப சாஸ்திர முறையில் அமைக்கப்பட்டு இருந்ததுதான்.

ஸ்வயம்புவாக தோன்றிய தெய்வங்களின் சிலைகள் சிலவற்றில் உருவங்கள் இருந்தன. ஆனால் பலவற்றிலும் அவை யாரால் சிலை வடிவாக்கப்பட்டது என்ற விவரமே தெரியவில்லை. உதாரணமாக அங்கொன்றும், இங்கொன்றுமாக பூமிக்கு அடியில் புதைந்து கிடந்தவை கண்டு பிடிக்கப்பட்டபோது அவை எந்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை கூறினார்களே தவிர யாரால் வடிவமைக்கப்பட்டது என்பது விளக்கப்படாமல் உள்ளது. இதை எந்த ஆராய்ச்சியாளரும் விளக்க முடியவில்லை. வேத காலத்தில் கூட அதாவது கி.மு 1500 ஆண்டுகளில் சிலை அமைப்பு வடிவங்களில் தெய்வச் சிலைகள் இருந்ததாக தெரியவில்லை. யாகங்கள் மற்றும் பூஜைகள் மட்டுமே செய்யப்பட்டு வந்துள்ளன. உருவ அமைப்புக்கள் வெகு காலம் பொறுத்தே வந்துள்ளன.
........தொடரும்

No comments:

Post a Comment