Tuesday, 10 November 2015

எதிரிகளை வெல்லும் “சத்ரு ஜெய” ஹோமம்!

எதிரிகளை வெல்லும் “சத்ரு ஜெய” ஹோமம்!
தமிழர்கள் வாழ்வில் தீ வளர்த்து செய்யும் சடங்குகள் எப்போது துவங்கியது என்பது குறித்த சரியான தகவல்கள் இல்லை. ஆனால் அகத்தியர் துவங்கி பல சித்தர் பெருமக்கள் தங்களின் பாடல்களில் இந்த சடங்குகள் குறித்த தகவல்களை அளித்திருக்கின்றனர். வேள்வி, யாகம், ஹோமம், ஓமம் என பல பெயர்களால் வழங்கப் படும் இந்தத் தீச்சடங்கு குறித்த அறிமுகங்களையும் அவற்றின் வகைகளையும் ஏற்கனவே பல பதிவுகளின் ஊடே பகிர்ந்திருப்பதால், நேரடியாக சத்ருஜெய ஹோமம் பற்றி பார்ப்போம்.

புதியவர்கள் மற்றும் தேவையுள்ளோர் ஹோமச் சடங்குகள் பற்றிய பழைய பதிவுகளை இந்த இணைப்பில் சென்று வாசித்து விட வேண்டுகிறேன்.

அகத்தியர் அருளிய "அகத்தியர் 12000" என்ற நூலில் இருந்து இந்த தகவல்கள் சேகரிக்கப் பட்டது.

கேளப்பா சத்ருஜெயஓம சூட்சுமந்தான்
கெடியான நாற்கோண குண்டம்செய்து
தயங்காதே நாயுருவி சமித்துவாங்கி
திறமாக அக்கினியேதான் வளர்த்து
மயங்காமல் புவனையுட மந்திரந்தன்னால்
மகத்தான கொடியறுகா லோமம்பண்ணு.

- அகத்தியர்.

செய்யப்பா நூத்தெட்டு ஆகுதியேசெய்ய
சிறுமையோடு சதிநோக்கும்சத்ருகள் சிதறிப்போகும்
போமடா சதிகளெலாம் முனைக்கண்டபோதே
பொல்லாங்கு செயல்களெல்லாம் நில்லாதையா
சொல்லடா சொல்லுதற்கு நாவேயில்லை
சத்ருஜெய ஓமத்தின் பெருமைதானே.

- அகத்தியர்.

இந்த ஹோமத்திற்கு நாற்கோண ஹோம குண்டத்தை பயன் படுத்த வேண்டுமாம். பாடலில் உள்ள குறிப்புகளின் படி வரைந்த ஹோம குண்டத்தின் படத்தினை கீழே கொடுத்திருக்கிறேன்.

ஹோமத்தினை செய்பவர் கிழக்கு முகமாய் அமர்ந்திட வேண்டும். ஹோம குண்டத்தில் நாயுருவி குச்சிகளை இட்டு தீ வளர்க்க வேண்டும், அப்படி தீயை வளர்க்கும் போது அக்கினியின் மூல மந்திரமான “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என்ற மந்திரத்தை கூறியவாறே தீயை வளர்க்க வேண்டும்.

நன்கு வளர்ந்த தீயில் புவனையின் மூல மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா” என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே கொடியறுகினைப் போட வேண்டுமாம். இப்படி 108 தடவை மந்திரம் சொல்லி கொடியறுகினைப் போடவேண்டும் என்கிறார்.

இப்படி செய்வதன் மூலம் இந்த ஹோமத்தை செய்தவரின் எதிரிகள் இல்லாது நீங்குவதுடன், சதிச் செயல்கள், பொல்லாங்குகளினால் எவ்வித துன்பமும் விளையாது என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தை எவரும் செய்து பலனடையலாம்.

No comments:

Post a Comment