Sunday 22 November 2015

சதுரகிரி மலை

சதுரகிரி மலை

சதுரகிரியும் திருவண்ணாமலையும் எத்தனை முறை சென்றாலும் ஒவ்வொரு முறையும் அதன் பிரம்மாண்டத்தை உணர்வதில் தவறியதே இல்லை.

  நோய் தீர்க்கும் மலை;

சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும் மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது . இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி மூலிகை கலந்த காற்று பட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள் .சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கிறார்கள்.

  திசைக்கு நான்கு கிரிகள் ( மலை ) வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது .
மலையின் பரப்பளவு 64 ஆயிரம்
ஏக்கர்.
தாணிப்பாறை அடிவாரம்__ கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம்
   மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை " சஞ்சீவி மலை " என்கின்றனர்.
   சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.
  ஆடி அமாவாசை முக்கிய விழா .
தை அமாவாசை , மகாசிவராத்திரி , சித்ரா பவுர்ணமி  மார்கழிமுதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும்.
பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்த போதே செய்ததாக கூறப்படுகிறது.
  இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும் பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்கு இந்த புல்லை உபயோகித்து உள்ளார்கள்.
   மகாலிங்கம் கோயில் வடக்கில் ஊஞ்சல் கருப்பண்ணசாமி கோயில் உள்ளது.
சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும்.
    ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும் தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது.
   சதுரகிரி மலையில் மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர்.
   மலைக்கு மேல் சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம்.எந்த நேரமும் உங்கள் வயிறை குளிரவைக்க கஞ்சி மடம் உள்ளது.உங்களுக்கு குறைந்த பட்சம் கஞ்சியோ கூழோ பழைய சோறோ நிச்சயம் கிடைக்கும் .
24 மணி நேரமும் என்பது தான் விசேஷம்.மிகப் பெரிய குழுவாக சென்றால் முன் கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும்.
  சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டு உள்ளனர்.
    சதுரகிரி யில் தீர்த்தங்கள்.
  சந்திர தீர்த்தம் __ சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில்  " சந்திர தீர்த்தம் " இருக்கிறது .இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை ,  காமம் , குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெறலாம்.
       கௌண்டின்னிய தீர்த்தம் __
சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது இந்த தீர்த்தம் இது தெய்வீக தன்மை வாய்ந்த நதியாகும் . வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும் ரிஷிகளும் சிவபெருமானிடம் வேண்ட ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு லிங்கத்தில் மறைந்தார் என்பது ஜதீகம்.
கங்கை, கோதாரி, கோமதி ,  சிந்து, தாமிரவருணி , துங்கபத்திரை முதலிய புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு. இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு " பாவகரி நதி "
என்னும் பெயரும் உண்டு.
  சந்தன மகாலிங்கம் தீர்த்தம்__
இது சதுரகிரியின் மேல் " காளிவனம் " என்கிற இருண்டவனம் ஒன்று உள்ளது.அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.உமையாள் பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாக சிவபெருமானை விட்டு பிரிந்து அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும்.
இப்புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும்.
        இது தவிர சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய திருமஞ்சனப் பொய்கை  உண்டு.
  காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட பிரம்மா தீர்த்தம் ஒன்று.
காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது .இதுதவிர கோரகர், இராமதேவர் , போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கபட்ட பொய்கைத் தீர்த்தம். பசுக்கிடைத் தீர்த்தம் குளிராட்டித் தீர்த்தம்  போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளது .மகாலிங்கம் கோயிலில் ருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது .இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
மகரிஷிகளும் சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகிரியில் வீற்றிருக்கிறார்கள்.
      பொதுவாகவே மலைகளின் மேல் மனிதர்களுக்கு ஆயுளும் ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும் மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள் யாவும் இருக்கின்றன .இவைகளைத் தழுவி வரும் காற்று நம் மீது பட்டவுடன் உடலின் உள்ள நோய்கள் தீர்கின்றன.
   அபூர்வ மூலிகைகள்
இங்கே கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும் .
  சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது.இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும் .அந்தக் காய் கனிந்து விழும் போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும் . விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.
  அதேபோல் " ஏர் அழிஞ்ச மரம் " என்றொரு மரம் உண்டு.இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும் . விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும்.இடையில் மழை காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் வந்து ஒட்டிக் கொள்ளும்.
   சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை விருட்சம் என்றொரு மரமுண்டு அம்மரத்தினடியில் யாராவது
ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும் அம்மரத்தை வெட்டினால் குத்தினால் பால் வரும்.
   இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு
இந்த விருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும்.வெட்டினால் பால் கொட்டும் .நவபாஷாண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும்.
  இவை எல்லாவற்றையும் விட தூக்கி சாப்பிடும் விஷயம் ஒன்று உள்ளது .மலையில் மிக அடர்ந்த பகுதியில் " மதி மயக்கி வனம் " என்ற பகுதி உள்ளது.இங்கே உள்ளே சென்றவர்கள் மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர்.
  இன்றும் அமாவாசை பெளர்ணமி தினங்களில் சித்தர்கள்  ரிஷிகள் மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர்.கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் மலைப்பகுதியில் விழுகின்றன.
         உங்கள் தேடல் பக்தி உண்மை எனில்  நீங்கள் மனதார நினைத்து வழிபாடு செய்தால் சித்தர் தரிசனம் உங்களுக்கு சதுரகிரியில் நிச்சயம் கைகூடும்.இதை நிறைய பக்தர்கள் அனுபவித்து இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment