Sunday 29 November 2015

பீஜமந்திரம்

பீஜமந்திரம்..

இதுவரை பதிவிட்ட பதிவிலேயே மிக முக்கியமான பதிவு இப்பதிவாகும். பீஜ மந்திரங்களை உட்சரிப்பதனால் பயன் என்ன?? என்பதை விளக்குவதே இப்பதிவு.
நாம் சாதாரணமாக வார்த்தைகளை பயன்படுத்தும் போதும் பேசும் போதும் "ம்" தான் "ங்" ஆக மாறுகின்றது. அதாவது "ஓம்"காரம் என்பது "ஓங்"காரமாகவும், "ரீம்"காரம் என்பது "ரீங்"காரமாகவும் மாறுகின்றது. "காரம்" என்பது வரிசை என பொருள் கொள்ள வேண்டும். ஆனால் குழந்தைகளை பொறுத்தவரையில் முதலில் பேச பழகும்போது "ங்" சேர்ந்த வார்த்தைகளை தான் அதிகம் பயன்படுத்துகின்றன. அதாவது அங்கு, வங்கு, வங், யங் போன்ற பீஜ வார்த்தைகளை பயன்படுத்துகின்றன. இதற்குபின் தான் "ம்" சேர்ந்த பீஜ வார்த்தைகளை பயன்படுத்துகின்றன. அதாவது அம்மா, ஓம், ஆமா போன்ற வார்த்தைகளை உச்சரிக்கின்றன.
மேலும் "ங்" சேர்ந்த பீஜங்களை உச்சரிக்கும் குழந்தைகள் பெரும்பாலும் இமையை அதிகமாக அசைக்காது கூர்ந்து எதையும் கவனிக்கும். இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் இது பொருந்தும்.
அடுத்ததாக "ம்" சேர்ந்த பீஜங்களை ஊமை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக இம், உம், அம், ஓம், ஈம் போன்ற வார்த்தைகள். இதனால் வாய் பேசாதவர்களுக்கு இவ்வார்த்தைகள் இயற்கையாகவே வருவதால் அவர்களுக்கு ஓர் தனித்துவமான உள்ளே உற்றுநோக்கல் எளிதாக கிடைக்கின்றது. எதிலும் வெற்றியடைய வேண்டும் என்ற தன்னம்பிக்கை வெறி அதிகமாகிறது. இதுவும் இந்த பலனும் அனைவருக்கும் பொருந்தும். ஆக "ங்" சேர்ந்த பீஜங்களை உச்சரித்து பழகினால் வெளியில் உற்று நோக்கலும், நாதமும், இமை அசைக்கா தன்மையும் எளிதாக கைகூடும். மேலும் இமை அசைவது குறைய குறைய மன சஞ்சலம் குறைந்து மன நிம்மதியும் எதிலும் எளிதாக முடிவெடுக்கும் திறனும் கிடைக்கும்.
சித்தர்கள் முதல் அனைவரும் போற்றும் நன் மந்திரங்களுள் "அங்" என்ற பீஜ மந்திரமும் ஒன்று. இம்மந்திரத்தை ஒருவர் தொடர்ந்து மனதினால் உட்சரித்து கொண்டிருந்தாலே போதும், அவர் எல்லா விதத்திலும் சகல நன்மைகளையும் அடைவது சத்தியம்.
1. இந்த "அங்" என்ற பீஜமந்திரத்தை தொடர்ந்து மனதினுள் உட்சரித்துகொண்டிருந்தால் "கங்" என்று மாறி ஒலிக்கும். கங் என்ற பீஜம் கணபதிக்கு ஊறிய மந்திரமாகும். எனவே இதை மந்திரங்களிலே முதன்மையானது என்பர்.
2. "அங்" என்று உட்சரிக்க தொடங்கிய நொடியே வாசி(சுவாசம்) ஊர்த்துவ கதியாக அண்ணாக்கிற்கு மேலே செல்வதை கண் கூடாக உணரலாம். வாசியோகம் செய்வதால் என்ன பலன் உண்டோ அதே பலன் இதற்கும் உண்டு.
3. இம்மந்திரத்தை தொடர்ந்து ஐந்து நிமிடத்திற்கு மேல் உட்சரிக்கும் போதே சுவாசம் இயற்கையாகவே குறைய தொடங்கும். தொடர்ந்து உட்சரிக்கும் போது சுவாசம் இயற்கையாகவே நின்றுவிடும். வாசி, கிரியா யோகத்தின் முடிவு நிலை என்பது சுவாசமற்ற நிலையாகும். அது இம்மந்திரத்தால் இயற்கையாகவே நடந்துவிடுகின்றது. மேலும் இம்மந்திரம் எண்ணெற்ற பயன்களை தன்னுள் அடக்கி வைத்துள்ளது.
அங்" என்பது வாலைக்குரிய பீஜமந்திரமாகும். அதாவது "அம்" என்ற நாதம் ஒளிக்குரியது ஆகும். ஒருவர் தொடர்ந்து இம்மந்திரத்தை மனதினுள் உட்சரிக்கும் போது ஒளியின் நாத அதிர்வுகளை முதலில் கேட்க தொடங்கி பின் பார்க்கவும் தொடங்குகின்றான். ஒளியை பற்றிய எல்லா இரகசியங்களும் அவனுக்குள் ஒலிக்கும் நாதத்தின் மூலமாக கற்றுதரப்படுகின்றது. இது விஞ்ஞான முறையில் கூறுவதாகும். மெஞ்ஞானமுறையில் கூற வேண்டும் என்றால் வாலையின் அருளை பெற்றவன் என்பார்கள். மேலும் அவன் "அங்" என்று தொடர்ந்து உட்சரித்துக் கொண்டே இருக்கும் போது, அது "கங்" என்று மாறி ஒலிக்க தொடங்கும். வேண்டுமென்றால் நீங்கள் அங்அங்அங் என்று வேகமாக உட்சரித்து பாருங்கள் அது "கங்" என்று மாறி கேட்கும். முன்பே கண்டதுபோல் "கங்" என்பது கணபதிக்குரிய பீஜமந்திரமாகும். மேலும் "கம்" என்பது ஆகாயத்திற்கு உரிய நாதமாகும். எனவே அந்நாதத்தின் மூலமாக ஆகாயத்தின் இரகசியங்களை கற்றுகொள்கின்றான்.
மேலும் ஆகாயத்தில் எண்ணென்ன உள்ளனவோ, அவைகளின் நாத ஒலிகளும் இவனுள் கேட்க தொடங்கி அவைகளின் இரகசியங்களையும் இவனுக்கு அந்தந்த நாதங்களின் மூலமாக கற்றுதரப்படுகின்றது. பொதுவாக ஒவ்வொரு விதமான மந்திரங்களுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு என்பார்கள். உண்மையில் ஒருவர் விடாமுயற்சியுடன் ஒரே மந்திரத்தை உட்சரித்து கொண்டே இருந்தால் போதும், மேலே பார்த்ததுபோல் அம்மந்திரமே மாறிமாறி ஒலித்து அவனுக்கு இல்லறத்தில் சகல நன்மைகளையும் பெறசெய்து, ஆன்மீகத்தின் சகல இரகசியங்களையும் கற்றுதந்துவிடும்.
ஒரே மந்திரத்தை தொடர்ந்து உட்சரிப்பது என்பது ஒரே இடத்தில் மண்ணை தோண்டுவதற்கு சமம். என்றோ ஒரு நாள் தண்ணீர் கிடைத்து தான் ஆக வேண்டும். ஒருவன் ஆன்மீகத்தில் பின்தங்குவதற்கு காரணம் பல இடங்களில் தோண்டுவதால் தான். அதுவும் வெளியே தோண்டுவதால் தான். அது அவரவர் எண்ணங்களையும் சூழ்நிலையையும் பொறுத்தது. ஆனால் கண்டிப்பாக பலன் உண்டு.
ஆன்மீகத்தில் ஒருவர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய கட்டுபாடுகளையும், விடை கிடைக்காத எதார்த்தமான கேள்விகளுக்கு விடைகளையும் விளக்குவதே இப்பதிவு.
1. எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களையும் உங்கள் ஆன்மீக முறைகளையும் வெளிக்காட்ட கூடாது. பொதுவாக ஒருவர் தான் செய்யும் யோகமுறைகளையோ மந்திர ஜபங்களையோ வெளிப்படுத்தும் போதே அவற்றின் பலன்கள் குறைந்து விடுகின்றன.அவர் அதை வெளிபடுத்த காரணமே தன்னை பற்றி பெருமைபட்டு கொள்ளவோ அல்லது தனது முறைகளை பெருமைபடுத்த முற்படுவதே ஆகும். இதில் அவரை பற்றி வெளிபடுத்தும் போது அவரின் ஆணவம் அதிகமாகின்றது. அவரின் முறைகளை பற்றி வெளிபடுத்தும் போது தேவையில்லாத கேலி பேச்சுகளுக்கு ஆளாகின்றார். ஆன்மீகத்தில் உயர்வுநிலை என்பது ஒன்றும் இல்லாமல் இருப்பதுதான். அதாவது மனதில் எந்த ஒரு எண்ணமோ சலனமோ இல்லாமல் இருப்பது. மிகவும் சாதாரண மனிதன் எவனோ!! மிகவும் அசாதாரண மனிதனும் அவனே. அதாவது அவனால் மட்டும்தான் அசாதாரண செயல்களை செய்யமுடியும். எங்கே எளிமையும், பணிவும் உள்ளதோ!! அங்கே ஆணவமும் ஆடம்பரமும் இருக்காது!! மாறாக அவனிருப்பான்!! ஆன்மீகத்தை பொறுத்தவரை மறைந்து வாழ்பவனுக்கு, அதாவது தன்னை மறைத்து வாழ்பவனுக்கே அனைத்தும் எளிது. அவன் தன்னை எந்த சூழ்நிலையிலும் வெளிபடுத்த மாட்டான். எளிமை என்ற வாழ்க்கையே அனைத்திற்கும் ஆதாரம்.
2. பலவருடங்கள் பல யோகங்கள் செய்தும் எந்தவித முன்னேற்றமும் தெரியவில்லை!! இதற்கு காரணம் என்ன??
ஒருவன் ஒரு முறையை கடைபிடிக்க தொடங்கும் போதே அது அதன் வேலையை தொடங்கிவிடுகின்றது. ஆனால் அது முதலில் வேலை செய்வது அவன் கர்மவினையில் ஆகும். அதாவது முதலில் வாங்கிய கடனை அடைத்த பிறகுதான் சேமிக்க முடியும். இதை புரிந்து கொள்ளாமல் ஆன்மீகத்தில் முன்னேற நிறைய பொருமை அவசியம் என்று கதைகட்டி விட்டார்கள்.
3. ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும் பலர் ஏன் கஷ்டபடுகின்றனர்??
இதற்கு காரணம் அவர்களே!! அதாவது நுழைந்தால் மட்டும் போதுமா?? அவர்கள் மனதில் உள்ள தீய எண்ணங்களை அகற்ற வேண்டாமா!! முன்பே சொன்னது போல் ஒரு பயிற்சியை கடைபிடிக்கும் போது அது வேலை செய்வது அவன் கர்மாவில் ஆகும். இவன் அந்த சமயத்தில் அடுத்தவர்களுக்கு தன் எண்ணங்களால் தீங்கு நினைக்கும்போது அது அவனுக்கே திருப்பப்படுகின்றது. அதுவும் அவனுக்கு அதுபோன்ற எண்ணங்களை வரவிடாமல் தடுப்பதற்கு ஆகும். நல்ல எண்ணம், சொல், செயல் உருவாக்கி கொண்டால் போதும். கஷ்டம் ஏற்பட வாய்ப்பு இல்லை.
4. ஆன்மீக அனுபவங்களை பகிர வேண்டாம்!! ஒருநிலைக்கு மேல் செல்லும்போது பலவிதமான அனுபவங்களும் இரகசியங்களும் கிடைக்கும். இதை வெளிபடுத்துவது என்பது தன்னை பற்றி பெருமைபட்டு கொள்வதற்காகவே, மேலும் பக்குவநிலைக்கு தகுந்தவாறே இரகசியங்கள் கற்பிக்கபடுகின்றன. இதை வெளிபடுத்தும் போது அடுத்து வரவிருக்கும் பாடங்கள் தடைசெய்ய படுகின்றன.
5. அடுத்தவர் முறைகளில் தலையிட வேண்டாம்!! ஆன்மீகத்தில் எல்லோருக்கும் ஒரே விதமான பயிற்சி கிடையாது. எனவே மற்றவர்கள் பாதைகளில் நீங்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. அப்படி அடுத்தவர் முறை தவறு என்று நீங்கள் உணர்ந்தால், அதை சொல்வதற்கு நீங்கள் ஆன்மீகத்தில் கரைகண்டவராக கரைகடந்தவராக இருக்க வேண்டும். இது மனதில் பதிந்தால் யாருடைய பாதையிலும் தலையிட தோன்றாது.
எவனொருவன் தன்னை தாழ்த்தி கொள்கின்றானோ, அவனே ஆன்மீகத்தின் உச்சநிலையை எளிதாக அடையமுடியும். இறைவன் தான் குறிகோள் என்றால் நமது கடமைகளிலும் இறைவனின் மீது மட்டும் மனம் செலுத்த வேண்டும். அதுதான் ஆன்மீகத்திற்கு உண்டான எளிமையான பாதை. உங்களை நீங்கள் வெளிகாட்டி கொள்ளாத வரை எந்த ஒரு எதிர்பார்ப்பிற்குள்ளும் சிக்க வாய்ப்பே இல்லை. எளிமை, பணிவு, அன்பு, தன்னை தாழ்த்தி கொள்ளுதல், மறைந்து வாழ்வது(தன்னை(நான்) மறைத்து வாழ்வது) போன்ற நல்ல குணங்களை வளர்த்து கொள்பவர்களுக்கு ஆன்மீகமும் வாழ்க்கையும் எளிமையானது!!! இனிமையானது!!!

No comments:

Post a Comment