Saturday 30 January 2016

நரசிம்மரின் சக்தி வாய்ந்த ருண விமோசன கோத்திரம்

நரசிம்மரின் சக்தி வாய்ந்த ருண விமோசன கோத்திரம்

கடன், கடனாளி, கடனை அடைப்பவர்.

ருணம் என்றால் கடன். எப்போதும் கடனே இல்லாத மனிதர்கள் என்று யாரும் இல்லை. மிகப் பெரிய கோடிஸ்வரர்கள் கூட தனது வியாபாரத்தை விருத்தி செய்து கொள்ள அரசிடமோ இல்லை வங்கிகளிலோ, கடன் வாங்குவது என்பது சகஜமாக இருக்கிறது. பணம் இருந்தாலும், அதை கையில் வைத்துக் கொண்டு செலவு செய்வது ஆபத்து, என்பதாலும் மக்கள் இந்த கடனட்டை போன்றவற்றை கொண்டு செலவு செய்கிறோம்.

அதற்கு திரும்ப கட்டும் வரையில் அதுவும் கடன் தானே?. வாங்கிய கடனைக் கட்ட இயலவில்லையெனும் போது இந்த கடன்களால் ஏற்படும் இன்னல்கள் எவ்வளவு? . சமீபத்தில் கூட அரசு வாராக் கடன் பற்றிய தகவல் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்பித்ததை அறிவோம். இதற்கு என்ன என்கிறீர்களா?.

இது மாதிரியாக கடன் வாங்கியவர்களது நிலை எப்படியிருக்கும் என்பதை 'கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' அப்படின்னு பெரிவர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். ஆக இந்த கடனானது மனதை வாட்டும், செயலை முடக்கும் என்பதை முன்னோர் அறிந்துள்ளனர்.

கடன் என்றால் அது எந்தவிதமான கடனாகவும் இருக்கலாமே!, நன்றிக் கடன், பணம்/பொருள் தொடர்புடைய கடன், தேவ கடன், ரிஷிகளுக்கான கடன், நீத்தார் கடன் என்று எத்தனை எத்தனை விதங்கள். மனிதனாய் பிறந்த ஓவ்வொருவரும் இதில் சிலவற்றை ஏற்றே ஆக வேண்டியிருக்கிறதே?.

இதற்கு ப்ரதிபலனாக நாம் என்ன செய்கிறோம்? நன்றி கூறுகிறோம், சில சமயம் செயலில் நன்றியை காட்டுகிறோம். சில நேரங்களில் நமது மமதை/ அஹங்காரம் போன்றவற்றால் இந்த நன்றி கூட சொல்வதில்லை. இவ்வாறான கடன்களிலிருந்து நம்மைக் காக்க என்று சான்றோர்கள் சில ஸ்லோகங்களை/மந்த்ரங்களை/செயல்களை பண்ணி, பரிஷித்து, பலன்களை உணர்ந்து அதன்பின் அவற்றை நாமும் செய்ய பணித்துள்ளனர்.

இவ்வாறாக பெரியவர்களால் சொல்லப்பட்டு, பரிக்ஷித்துணர்ந்து நமக்களிக்க்ப்பட்ட ஒன்றை இன்று பார்க்கலாம். இது நமது வாழ்வில் நாம் எதிர் நோக்கும் மேலே சொன்னபடியான "எல்லாவிதமான கடன்களிலிருந்தும்" நம்மைக் காக்க நரஸிம்ம மூர்த்தியின் மீது சொல்லப்பட்டது தான் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ருண விமோசன ஸ்தோத்ரம்.

🌼சின்னஞ்சிறு குழந்தையான ப்ரஹலாதரை அனுக்ரஹிப்பதற்காக ஸிம்ம முகமும், கழுத்துக்கு கீழே மனித உடலுமாக ஸ்ரீநரஸிம்ம மூர்த்தி வைகாச
சுக்ல சதுர்தசியில் ப்ரதோஷ காலத்தில் ஸ்வாதீ நக்ஷத்திரத்தில் தூணிலிருந்து அவதரித்து ஹிரண்யகசிபுவை ஸம்ஹரித்தார். உக்ர நரஸிம்மரான இவரை அனைவரும் ஸ்தோத்ரம் செய்தும் சாந்தப்படுத்த இயலாத காலத்தில் மஹேஸ்வரன் தனது அம்சமான சரப ரூபத்தில் வந்து சாந்தப்படுத்தினார். இதன் பின் உலகிற்கு அனுக்ரஹிக்கும் பொருட்டு மஹாலக்ஷ்மியை தன்னுடன் இணைத்துக் கொண்டு ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மராக காட்சி தந்தார். யோகநரஸிம்மர், வீர நரஸிம்மர் என்று பல வடிவங்களில் காக்ஷியளிக்கும் இவரை பூஜித்தால் வீரம், செல்வம், போகம், கல்வி, துணிவு, புகழ் போன்ற எல்லாவற்றையும் அடையலாம்.

🌼1 தேவதா கார்ய ஸித்யர்த்தம் ஸபா ஸ்தம்ப ஸமுத்பவம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

தேவதைகளின் காரியத்தை ஸாதிப்பதற்காக ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை
கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

🌼2 லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வர தாயகம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

மகாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களைத் தருபவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

🌼3 ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

ஹிரண்யகசிபுவின் குடலை மாலையாக அணிந்தவரும், சங்கம், சக்ரம், தாமரை, ஆயுதம் இவைகளை கைகளில் தாங்கியவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

🌼4 ஸ்மரணாத் ஸ்ர்வ பாபக்னம் கத்ரூஜ விஷ நாசநம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

நினைத்த உடனேயே அனைத்து பாபங்களையும் போக்கடிப்பவரும், கொடிய விஷத்தை முறியடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

🌼5 ஸிம்ஹாநாதேந மஹதா திக்தந்தி பயநாசனம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

மிக பயங்கரமான சிம்ஹத்தின் கர்ஜனையால் எட்டுத் திசையிலும் உள்ள திக்கஜங்களுக்கும் பயத்தை போக்கடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

🌼6 ப்ரஹ்லாதவரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரணம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

பக்தனான ப்ரஹலாதனுக்கு அனுக்ரஹம் செய்தவரும், மஹாலக்ஷ்மியுடன் கூடியவரும், அரக்கர் தலைவனான ஹிரண்யகசிபுவை சம்ஹரித்த மஹாவீரருமான,ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

🌼7 க்ரூரக்ரஹை பீடிதானாம் பக்தாநாம் பயப்ரதம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

உக்ரமும் கோரமும் உடைய கிரஹங்களால் பீடிக்கப்பட்ட பக்தர்களுக்கு அபயம் அளிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

🌼8 வேத வேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே
வேதங்கள், உபநிஷதங்கள், யாகங்கள் முதலியவைகளுக்கு தலைவரும், ப்ரம்மா, ருத்ரன் முதலியவர்களால் வணங்கப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

🌼9 ய: இதம் படதே நித்யம் ருணமோச ந ஸம்ஜிதம்அந்ருணீ ஜாயதே ஸ்த்யோ தநம் சீக்ரமவாப் நுயாத்

யார் இந்த ருணமோசனம் என்ற பெயருடைய ஸ்லோகத்தை தினம் படிக்கின்றாரோ அவர் விரைவிலேயே கடனிலிருந்து விடுபட்டவனாகி மேலும் சகல செல்வத்தையும் அடைவார்.
பூமி நீளா சமேத ஸ்ரீல்க்ஷ்மி நரஸிம்ம ஸ்வாமினே நம:🌼

No comments:

Post a Comment