Tuesday, 10 November 2015

குறி சொல்வது எப்படி?

குறி சொல்வது எப்படி?
பண்டைய தமிழக வாழ்வியலில் ”குறி” கேட்டல், ”குறி” சொல்லுதல் தொடர்பான சரித்திர குறிப்புகள் பல நமக்கு கிடைத்திருக்கின்றன. இன்றைக்கும் இந்த குறி கேட்டல், மற்றும் குறி சொல்லுதல் நமது சமூகத்தில் பிரபலமான ஒன்று.

இன்றைக்கு இத்தனை தூரம் விஞ்ஞானம் வளர்ந்து விட்ட நிலையிலும் நம்முடைய சமூகத்தில் இத்தகைய குறி சொல்வோர் நிறையவே செல்வாக்குடன் காணப்படுகின்றனர். உண்மையில் இவர்களின் பின்னால் இருக்கும் சூட்சுமத்தை யாரும் ஆராய்வதில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபடவும் நேரமில்லை.

குறி சொல்வதில் பல வழிமுறைகளை நமது முன்னோர்கள் வரையறுத்துச் சொல்லியிருக்கின்றனர். அதில் முக்கியமானதாகவும், இலகுவானதாகவும் புலிப்பாணி சித்தர் வரையறுத்துச் சொல்லியிருப்பதை குறிப்பிடலாம்.

இந்த தகவல்கள் புலிப்பாணி சித்தர் அருளிய “பலதிரட்டு சூத்திரம்” என்கிற நூலில் இருந்து சேகரிக்கப்பட்டது.

பாரடா ஆடையொட்ட சமூமைப்பா
பண்பான நின்றிடந் தீஞ்சமூலி
சேரடா கருச்சீலை யிந்த மூன்றும்
செம்மையாய் கருக்கியல்லோ மைபோலாட்டி
சீரடா சுடலையென்ற தயிலஞ் சேர்த்துச்
ஈஷ வீரடா அனுமாரை தியானஞ் செய்து
விதமாகத் திலகமிட்டுக் குறிதான் சொலே.

- புலிப்பாணி சித்தர்.

சொல்லடா அஞ்சனாதேவி புத்ரா
சொகுசான வாயுமைந்தா புருஷரூபா
வல்லவா அனுமந்தா ராம தூதா
வந்துகுறி சொல்லென்று வணங்கி கொள்ளு
இல்லப்பா நினைத்ததெல்லாஞ் சொல்வான் பாரு
என்னசொல்வே னவனுடைய குறிதான் மைந்தா
நல்லப்பா போகருட கடாட்சத்தாலே
நலமாகப் புலிப்பாணி பாடினேனே.

- புலிப்பாணி சித்தர்.

ஆடையொட்டி சமூலம், தீஞ்சமூலி, கருப்புத் துணி ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து எரித்து கருக்கி, அதனை கல்வத்தில் இட்டு சுடலைத் தைலம்வார்த்து நன்கு மைபோல அரைத்து அதனை ஒரு மைபதமானதும் அதில் சுடலைத் தைலம் சேர்த்து நன்கு அரைத்து சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டுமாம்.

பின்னர் குறிசொல்ல வேண்டிய சந்தர்ப்பம் வரும் போது, சிமிழில் இருந்து மையை எடுத்து "அஞ்சனா தேவி புத்திரா வாயு மைந்தா புருஷரூபா வல்லவா அனுமந்தா இராம தூதா வந்து குறி சொல்லு" என்ற மந்திரத்தினை செபித்து மையினைத் திலகமாக இட்டு குறி சொல்ல வேண்டுமாம். அப்போது தேடிவருபவரின் கர்மவினைகள், பிரச்சனைகள் அதற்கான பரிகாரங்கள் மனக்கண்ணில் தெரியுமாம். இதனை குருநாதர் போகருடைய கருணையினால் சொல்கிறேன் என்கிறார்.

No comments:

Post a Comment