Friday 1 November 2019

துலாம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்


துலாம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

எந்த ஊருக்குப் பிழைக்கச் சென்றாலும் நீங்கள் சொந்த ஊரை மறக்காதவர். தோல்வி என்பது வெற்றிக்கான ஏணிப்படிதான் என்பதை உணர்ந்த கடின உழைப்பாளி. உங்களின் தனஸ்தானமான 2 - ம் வீட்டில் அமர்ந்து பணப்புழக்கத்தையும், சமூகத்தில் அந்தஸ்தையும், வசதி, வாய்ப்புகளையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தந்த குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 3 - ம் வீட்டில் அமர்வதால் எதையும் திட்டமிட்டு செய்யுங்கள்.

எந்த ஒரு வேலையையும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். இளைய சகோதரரின் வகையில் பிணக்குகள் வரும். வீண் வறட்டு கௌரவத்துக்காக சேமிப்பைக் கரைத்துக்கொண்டிருக்காதீர்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். திடீரென்று அறிமுகமாகுபவரை நம்ப வேண்டாம்.

கணவன், மனைவிக்குள் வீண்வாக்குவாதங்கள் செய்யவேண்டாம். அன்பும், அன்யோன்யமும் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி முக்கிய விஷயங்களை ஒப்படைக்காமல், நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. தங்க நகைகளைக் கவனமாகக் கையாளுங்கள்.
அக்கம்பக்கம் வீட்டாருடன் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளவேண்டாம்.

சிலர் உங்களை நேரில் பார்க்கும்போது நல்லவர்களாகவும், பார்க்காத போது உங்களைப் பற்றி வேறுமாதிரியாகவும் பேசுவார்கள். கவனமாகப் பழகுங்கள். உறவினர்கள், நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ளவேண்டாம். இடைவெளி விட்டு பழகுவது நல்லது.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:
குரு உங்களின் ராசிக்கு 7 - ம் வீட்டைப் பார்ப்பதால் மனைவிவழியில் உதவிகள் உண்டு. குரு 9 - ம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவுக்கு குறைவிருக்காது. தந்தைவழிச் சொத்துகள் கைக்கு வரும். குரு லாப வீட்டைப் பார்ப்பதால் மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார். புது வாகனம் வாங்குவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தீராத பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்களின் ராசியாதிபதியும் அஷ்டமாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் திடீர் பணவரவு உண்டு. வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும்.
6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்களின் லாபாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1 - ம் பாதத்தில் செல்வதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை மனத்தில் பிறக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். சி.எம்.டி.ஏ., ப்ளான் அப்ரூவல் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.

மகரத்தில் குருபகவான்:
28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 4 -ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் தாயாரின் உடல் நலனில் கவனமாக இருங்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும்.

குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:
7.7.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலகட்டத்தில் உத்திராடம் 1 - ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் எதிலும் நிதானித்துச் செயல்படுவது நல்லது. அரசு வகை விவகாரங்களில் அலட்சியமாக இருக்கவேண்டாம்.
31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால் உங்களின் ரசனை மாறும். எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். ஆரோக்கியம் சீராகும். வீடு, வாகனத்தைச் சீர்செய்வீர்கள். சுற்றுலாதலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

வியாபாரத்தில் சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்து கொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். தரமானப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். கட்டட உதிரிப் பாகங்கள், ஸ்டேஷனரி, பெட்ரோகெமிக்கல், டிராவல்ஸ் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

உத்தியோகத்தில் சின்னச்சின்ன அலைக்கழிப்புகள் இருக்கும். பணிகளைப் போராடி முடிக்கவேண்டி வரும். சக ஊழியர்களின் கடின உழைப்பால் தடைப்பட்ட வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். உயரதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். இடமாற்றம் சாதகமாகும்.

பெண்களுக்குத் தடைப்பட்ட உயர்கல்வியைத் தொடரும் வாய்ப்பு கிடைக்கும். நல்ல இடத்தில் வரன் அமையும். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற்று வேலையில் அமருவீர்கள்.

மாணவ, மாணவிகள் விரும்பிய நிறுவனத்தில் எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேருவீர்கள். அறிவாற்றல் கூடும். சின்னச்சின்ன தவறுகளையும் திருத்திக்கொள்ளுங்கள். நட்புவட்டம் விரிவடையும். ஆசிரியரிடம் தயங்காமல் உங்களின் சந்தேகங்களைக் கேட்டுத் தெளியுங்கள்.

:
கலைத்துறையினருக்குப் பெரிய வாய்ப்புகள் தேடி வரும். யதார்த்தமான உங்களின் படைப்புகளுக்கு பாராட்டுகள் கிடைக்கும்.
இந்த குரு மாற்றம் சிறுசிறு தடைகளையும், தடுமாற்றங்களையும் தந்தாலும் இடையிடையே வெற்றியையும், மகிழ்ச்சியையும் தரும்.

பரிகாரம்: விழுப்புரம் மாவட்டம் தீவனூர் என்னும் ஊரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு நெற்குத்தி விநாயகரை சங்கடஹர சதுர்த்தியன்று சென்று வழிபடுவது நன்மை தரும்.


No comments:

Post a Comment