Friday 1 November 2019

மேஷம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

மேஷம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

  
எல்லாவற்றையும் எளிதில் சமாளிக்கும் துணிச்சல்கொண்ட நீங்கள், மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்யத் தயங்குவீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அறிந்த நீங்கள், சோதனைகளையும் சாதனைகளாக மாற்றி முன்னேறத் துடிப்பவர்கள்.

உங்கள் ராசிக்கு 8 - ம் வீட்டில் மறைந்திருந்து எதையும் எட்டாக் கனியாக்கியதுடன், மன அழுத்தத்தையும் தந்துகொண்டிருந்த குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை உங்கள் ராசிக்கு பாக்கியாதிபதி வீடான 9 - ம் வீட்டில் நுழைவதால், வாழ்வில் புதிய வியூகங்களை அமைத்து முன்னேறத் தொடங்குவீர்கள். இனி தொட்ட காரியங்களெல்லாம் துலங்கும். தள்ளிப்போன திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இப்போது கூடி வரும். அறிவுப்பூர்வமாகவும், அனுபவப்பூர்வமாகவும் பேசத் தொடங்குவீர்கள்.
கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். மனைவி உங்களின் புதிய திட்டங்களை ஆதரிப்பார். மனைவிவழி உறவினர்களும் பக்கபலமாக இருப்பார்கள்.

குரு பகவானின் பார்வை

குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், சோகமாக இருந்த உங்களின் முகம் இனி மலர்ச்சி அடையும். அழகும் இளமையும் கூடும். புதிய வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனைக் குறைந்த வட்டிக்கு மாற்றுவீர்கள்.
உங்களின் ராசிக்கு 3 - ம் வீட்டை குரு பார்ப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். இளைய சகோதரர்களால் பயனடைவீர்கள். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அரசு வகையில் ஆதாயம் உண்டு.
உங்களின் ராசிக்கு 5 - ம் வீட்டை குரு பார்ப்பதால் முடிவுகள் எடுப்பதில் இருந்த குழப்பம், தடுமாற்றம் நீங்கும். தடைப்பட்டுவந்த குழந்தைபாக்கியம் இனி கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். பாகப்பிரிவினை சுமுகமாகும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
29.10.2019 முதல் 31.12.2019 வரை உள்ள கால கட்டங்களில் குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் சுபச்செலவுகள் அதிகமாகும். அசுவினி நட்சத்திரக்காரர்கள் அலைச்சலைக் குறைத்தது உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். யோகா, தியானத்திம் கை கொடுக்கும். சிலர் புது வீடு கட்டி குடிபுகுவார்கள்.
1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்களின் தன சப்தமாதிபதியான சுக்கிரனுக்குரிய பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால், இக்காலக்கட்டத்தில் குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். பணவரவு உண்டு. திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஆனால் பரணி நட்சத்திரக்காரர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்கள் பூர்வ புண்ணியாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1 - ம் பாதத்தில் செல்வதால், அரசு வகையில் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றிபெறுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். கார்த்திகை 1 - ம் பாதத்தில் பிறந்தவர்கள் எதிலும் கவனமாகச் செயல்பட வேண்டும். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

மகரத்தில் குருபகவான்:
28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 10 - ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் புதுத் தெம்பு பிறக்கும். காலநேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
7.07.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலகட்டத்தில் உத்திராடம் 1 - ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் முடிவுகள் எடுப்பதில் தயக்கம், தடுமாற்றம் வந்து நீங்கும். பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு காட்டவும் வேண்டாம். பணத்தட்டுப்பாடு வந்து நீங்கும்.
31.7.2020 முதல் 10.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால் பழுதாகிக் கிடந்த மின்னணு, மின்சார சாதனங்கள் புதிதாக வாங்குவீர்கள்.

வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை ஏற்படும். கடையை விரிவுபடுத்துவீர்கள். வேலையாட்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். ஷேர், உணவு, எண்டர் பிரைசஸ், ஜுவல்லரி, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்திணைவார்.

உத்தியோகத்தில் உங்களைப் பற்றி குறை கூறியவர்களுக்கு இனி பதிலடி கொடுப்பீர்கள். தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும்.

பெண்களுக்கு இருந்துவந்த உடல் உபாதைகள் நீங்கும். உத்தியோகம் அமையும். சிலர் உயர்கல்விக்காக அயல்நாடு செல்வீர்கள். எதிர்பார்த்தபடி நல்ல வரனும் அமைந்து திருமணம் சிறப்பாக முடியும்.

மாணவ மாணவிகள் நல்ல கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பைத் தொடங்குவார்கள். மொழித் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். மதிப்பெண் கூடும். கட்டுரை, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகளில் பரிசு பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு இனி பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடைய படைப்புகளை அரசு கௌரவிக்கும்.
இந்த குருப்பெயர்ச்சி முதல் வரிசையில் உங்களை உட்கார வைப்பதுடன், வசதி, வாய்ப்புகளையும் அதிகப்படுத்துவதாக அமையும்.

பரிகாரம்: திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரி எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபாலசுப்ரமணியரை சஷ்டி திதி நாளில் சென்று வணங்குங்கள். தமிழ் வழியில் பயிலும் ஏழை மாணவனின் கல்விக் கட்டணத்தைச் செலுத்துங்கள். குருவருள் கூடி வரும்.


No comments:

Post a Comment