Friday 1 November 2019

சிம்மம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்


சிம்மம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

போற்றுதல், தூற்றுதல் இரண்டையும் ஒன்றாகவே எண்ணும் நீங்கள், யாருக்காகவும் உங்களின் கொள்கைகளை மாற்றிக்கொள்ளாதவர். முன் வைத்த காலைப் பின் வைக்காத நீங்கள் திடீர் முடிவுகளை எடுத்து எதிரிகளை திக்குமுக்காடச் செய்வீர்கள்.
உங்களின் ராசிக்கு சுகஸ்தானமான 4 - ம் வீட்டில் அமர்ந்து கொண்டு வீண் விரயத்தையும், ஏமாற்றங்களையும் தந்த குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 5 - ம் வீட்டில் அமர்வதால் நீங்கள் புதிய பாதையில் பயணிப்பீர்கள்.

வாழ்வில் எதிர்பாராத அதிரடி மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தின் அடிப்படை வசதி, வாய்ப்புகள் உயரும். கல்யாணம், காது குத்து நிகழ்ச்சி என வீடு களைகட்டும். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். மகனுக்கும் நல்ல இடத்தில் மணப்பெண் அமையும்.

குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீக சொத்தில் உங்களின் பங்கு கைக்கு வரும். தாய்வழி உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். சொந்தமாக இடம் வாங்கும் யோகம் உண்டாகும். குலதெய்வக் கோயிலுக்குச் செய்யவேண்டிய நேர்த்திக்கடனை இப்போது நிறைவேற்றுவீர்கள்.

வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனைத் தந்து முடிப்பீர்கள். நட்புவட்டத்தால் பலனடைவீர்கள்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:
உங்களின் ராசிக்கு 9 - ம் வீட்டை குரு பார்ப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். கோயில் கும்பாபிஷேகத்தைத் தலைமையேற்று நடத்துவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பதினோறாம் வீட்டை குரு பார்ப்பதால் உங்களின் புகழ், கௌரவம் கூடும். புதிய பதவிக்கு உங்களின் பெயர் பரிந்துரை செய்யப்படும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
29.10.2019 முதல் 31.12.2019 வரை குருபகவான் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் மகம் நட்சத்திரக்காரர்கள் உணர்ச்சிவசப்படாமல் செயல்படுவது நல்லது. எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்.
உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது. பூரம், உத்திரம் 1 - ம் பாதம் நட்சத்திரக்காரர்களுக்கு ஓரளவு நற்பலன்கள் உண்டாகும்.

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்கள் ஜீவனாதிபதியான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால், பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைத்துப் பேச வேண்டாம். மகம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகள் பலிதமாகும்.
6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிநாதன் சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1 - ம் பாதத்தில் அமர்வதால் உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது. அரசு வகை காரியங்களில் கவனமாக இருங்கள்.

மகரத்தில் குரு பகவான்:
28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 6 - ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் எதிர்ப்புகள் அதிகமாகும். பழைய கடனை அடைக்க புதிய வழி பிறக்கும்.

குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்:
7.7.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலகட்டத்தில் உத்திராடம் 1 - ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.
அரசால் அனுகூலம் உண்டு. நீண்ட நாளாக எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.

31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால் பிரபலங்களின் உதவியுடன் தள்ளிப்போன காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். இல்லத்தில் திருமணம் கூடி வரும். வாகனத்தைச் சீர்செய்வீர்கள். அழகு, ஆரோக்கியம் கூடும்.

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. இங்கிதமாகவும், இதமாகவும் பேசி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். சிலர் புது தொழில் அல்லது புது கிளைகள் தொடங்குவீர்கள். மெடிக்கல், வாகனம், கல்விக் கூடங்கள், கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள். உங்களின் ரசனைக்கேற்ப கடையை விரிவுபடுத்துவீர்கள். சிலர் சொந்த இடத்துக்கு மாற்றுவீர்கள்.

பெண்கள் உயர்கல்வியில் வெற்றிபெறுவார்கள். தோஷங்களால் தடைப்பட்ட கல்யாணம் நல்லவிதத்தில் முடியும். நினைத்ததைச் சாதிப்பீர்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புதிய வேலை அமையும்.

மாணவ மாணவிகளின் நினைவாற்றல், அறிவாற்றல் கூடும். அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் குவிப்பார்கள். ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு. விரும்பிய படிப்பில் சேருவீர்கள்.

கலைத்துறையினர் புகழடைவார்கள். சிலருக்கு விருது கிடைக்கும். உதாசினப் படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். சம்பள பாக்கி கைக்கு வரும். உங்களின் படைப்புத் திறன் அதிகரிக்கும்.
இந்த குரு மாற்றம் தொட்டதெல்லாம் துலங்க வைப்பதுடன், எதிர்பாராத திடீர் யோகங்களையும் அள்ளித்தரும்.

பரிகாரம்: கரூர் மாவட்டம், பாளையம் எனும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீகமலவல்லித் தாயார் சமேத ஸ்ரீகதிர் நரசிங்கப் பெருமாளை சனிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். கட்டடத் தொழிலாளிக்கு உதவுங்கள். சாதித்துக் காட்டுவீர்கள்.


No comments:

Post a Comment