Friday 1 November 2019

மகரம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்


மகரம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சமமாக மதிக்கும் நீங்கள், மற்றவர் மனம்நோகாமல் பேசக்கூடியவர். தடைக்கற்களைப் படிக்கற்களாக்கி முன்னேறும் நீங்கள் ஆரவாரமில்லாமல் எதையும் சாதிப்பீர்கள்.

உங்களின் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து ஓரளவு வசதி வாய்ப்புகள், திடீர் யோகம் மற்றும் பணவரவு தந்துகொண்டிருந்த குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 12 - ம் வீடான விரய ஸ்தானத்தில் மறைவதால் வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும்.

பிரபலமான புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பழைய வீட்டை சிலர் இடித்துப் புதுப்பிப்பார்கள். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவல் கிடைத்து சிலர் புதிதாக வீடு கட்டத் தொடங்குவார்கள். உறவினர்கள், நண்பர்கள் வீட்டுத் திருமணம், கிரகப் பிரவேசம், காது குத்து போன்ற சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில், கணவன், மனைவிக்குள் வரும் சிறுசிறு பிரச்னைகளை பெரிதுபடுத்த வேண்டாம்.

பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு காட்டாதீர்கள். அவர்களது உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் பற்றி திட்டமிடுவீர்கள். மகளுக்கு வரன் தேடும்போது நன்றாக விசாரித்து திருமணம் முடிப்பது நல்லது. மனத்தில் பட்டதை பளிச்சென பேசி மற்றவர்களின் விமர்சனத்துக்கு உள்ளாவீர்கள். புதிய கடன்கள் வாங்கவேண்டாம். சொத்து ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அநவாசியமாக யாரிடமும் வாக்குறுதி தரவேண்டாம்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:
குரு உங்களின் சுகஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் உடல்நிலை சீராகும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். நல்ல காற்றோட்டம், குடிநீர் உள்ள வீட்டுக்கு மாறுவீர்கள். சிலர் வேறு ஊருக்கு குடிபெயர்வீர்கள்.

குரு 6 - ம் வீட்டைப் பார்ப்பதால் பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். குரு 8 - ம் வீட்டைப் பார்ப்பதால் ஆயுள், ஆரோக்கியம் கூடும். வழக்குகள் சாதகமாகும். பங்குச் சந்தையில் பணம் வரும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் மூல நட்சத்திரத்தில் செல்வதால் ஒரு பக்கம் அலைச்சல் இருந்தாலும் முன்னேற்றம் உண்டு. ஆனால், பணவரவு குறையாது. புகழ், கௌரவம் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. முக்கிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். சொத்துச் சிக்கல் ஒரு முடிவுக்கு வரும்.

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்களின் பூர்வ புண்ணியாதிபதியும், ஜீவனாதிபதியுமான சுக்கிரனின் பூராட நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் வருமானம் உயரும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் தொடர்பான முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தினருடன் சென்று குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்விகச் சொத்தில் சீர்திருத்தம் செய்வீர்கள்.
6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்கள் அஷ்டமாதிபதி சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1 - ம் பாதத்தில் செல்வதால், பயணத்தில் கவனமாக இருங்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம்.

மகரத்தில் குரு பகவான்:
28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்குள்ளேயே அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் பணிச்சுமை இருந்துகொண்டே இருக்கும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. புதிய நபர்களிடம் எச்சரிகையுடன் பழகுங்கள்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
7.7.2020 முதல் 30.7.2020 வரை உத்திராடம் 1-ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனத்தை வாட்டும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும்.

31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால் மின்னணு, மின்சாதனங்களைக் கவனமாகக் கையாளுங்கள். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். அவர்களின் நிறைகளைப் பாராட்டத் தயங்காதீர்கள்.

வியாபாரத்தில் சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். தேங்கிக் கிடந்த சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்று முடிப்பீர்கள். புதிதாக அறிமுகமாகும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். புகழ்பெற்ற நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் செய்வீர்கள். கடையையும் நவீனமயமாக்குவீர்கள். சங்கத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் உங்களுக்கென்று தனி இடம் உண்டு. இரும்பு, உணவு, ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமெண்ட் வகைகளில் லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்பு கிடைக்கும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப்போட்டு பார்க்கவேண்டி வரும். மூத்த அதிகாரிகளுடன் முரண்பாடுகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத்ததை முடிப்பீர்கள். பதவி உயர்வை எதிர்பார்க்கலாம்; பழைய சம்பள பாக்கி கைக்கு வரும்.

பெண்கள் பரபரப்பாகக் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பார்கள். எதிர்பார்த்தபடி நல்ல இடத்தில் வரன் அமையும். உயர் கல்வியில் விடுபட்ட பாடத்தை எழுதி வெற்றிபெறுவீர்கள். பெற்றோரின் நீண்ட நாள் கனவுகளை நனவாக்குவீர்கள்.

மாணவ, மாணவிகள் விளையாட்டுத்தனத்தைக் குறைத்து வகுப்பறையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கணிதம் மற்றும் மொழிப் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள்.

கலைத்துறையினர் விமர்சனங்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அதையும் தாண்டி முன்னேறுவீர்கள். புதிய பட வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த குரு மாற்றம் சுபச்செலவுகளைத் தருவதாகவும் நட்புவட்டத்தை விரிவடையச் செய்வதாகவும் உங்களுக்கு அமையும்.



பரிகாரம்:தஞ்சை மாவட்டம், ஆலங்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீகுருதட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். பார்வையிழந்தவர்களுக்கு உதவுங்கள். பலம் கூடும்.


No comments:

Post a Comment