Friday 1 November 2019

கடகம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்


கடகம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

தொலைதூரச் சிந்தனையுடைய நீங்கள், நாளை நமதே என்ற நம்பிக்கையுடன் எதையும் செய்பவர். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் நீங்கள், எதிரிகளையும் சிந்திக்கவைக்கும் செயல்திறன் கொண்டவர்கள்.

உங்களின் ராசிக்கு 5 - ம் வீட்டில் அமர்ந்து உங்களின் வருங்கால திட்டங்களை நிறைவேற்றிய குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 6 - ம் வீட்டில் மறைகிறார். சகட குரு சங்கடங்கள் தருவாரோ என கலங்கவேண்டாம். குரு பகவான் ஆட்சிபெற்று அமர்வதால் நல்லதே நடக்கும்.

வாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களை நம்பி இருக்காமல் தன் முயற்சியால் என்ன முடிகிறதோ அதைச் செய்து முன்னேறுவீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் இருக்கும்.

கணவன் மனைவி பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சிலர் பூர்வீக சொத்தை விற்றுவிட்டு நகரத்தை ஒட்டியுள்ள புறநகர் பகுதியில் குடியேறுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். உதவி செய்கிறேன் என்று சொல்லியிருந்தவர்கள் உங்களுக்கு உதவாமல் போகக்கூடும். எனவே மாற்றுவழியை யோசித்து வையுங்கள்.
நீங்கள் சிரித்தால் உலகமும் சிரிக்கும், நீங்கள் கோபப்பட்டால் உலகமும் கோபப்படும் என்பதை மறந்துவிடாதீர்கள். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:
குரு பகவான் குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் பணவரவு உண்டு. குடும்பத்தில் நிம்மதி உண்டு. அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பழைய நகையை மாற்றி புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். மகனின் அலட்சியப் போக்கு மாறும்.

குரு 10 - ம் வீட்டைப் பார்ப்பதால் புதிய இடத்தில் வேலை கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். கடினமான வேலைகளையும் எளிதாக முடிக்கும் சக்தி கிடைக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும்.

குரு 12 - ம் வீட்டைப் பார்ப்பதால் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். சுபசெலவுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். நீண்ட நாள்களாகப் போக நினைத்த புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
29.10.2019 முதல் 31.12.2019 வரை உள்ள காலகட்டங்களில் குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். புதிய முதலீடுகள் செய்து சொந்தமாகத் தொழில் தொடங்குவீர்கள். அயல்நாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் ஆதாயமடைவீர்கள்.
1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்களின் சுகஸ்தானாதிபதியும் லாபாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் தாயாரின் உடல்நிலை சீராகும். தாய்வழிச் சொத்துகள் கைக்கு வரும். புகழ் பெற்றவர்கள் நண்பர்களாவார்கள். மூத்த சகோதர வகையில் ஆதரவுப் பெருகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகளாலும், விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும்.
6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்கள் தனாதிபதி சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1 - ம் பாதத்தில் செல்வதால் எதிர்பார்த்த வகையில் பணவரவு உண்டு. இங்கிதமாகப் பேசி முக்கிய காரியங்களை முடிப்பீர்கள்.

மகரத்தில் குரு பகவான்:
28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 7 - ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் உங்களுடைய திறமைகள் வெளிப்படும். தள்ளிப்போன அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். நட்புவட்டம் விரிவடையும்.

குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்:
7.7.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலகட்டத்தில் உத்திராடம் 1 - ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வீடு கட்ட அரசாங்க அனுமதி கிடைக்கும். பொது விழாக்கள், சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.
31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால், இந்த கால கட்டத்தில் வீண் அலைச்சல், தர்ம சங்கடமான சூழ்நிலைகள் உருவாகும். முன்னெச்சரிக்கையானிருப்பது நல்லது.

வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் முரண்டு பிடிப்பார்கள். தொழில் போட்டிகள் அதிகமாகும். பழைய நிறுவனங்களைக் காட்டிலும் புதிய நிறுவனங்களின் பொருட்களை விற்பதன் மூலமாக அதிக ஆதாயமடைவீர்கள். சிமெண்ட், கணினி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோகத்தில் சக ஊழியர்களின் விடுமுறையால் வேலைச்சுமை அதிகமாகும். பதவி உயர்வு தாமதப்படும். புது உத்தியோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது.

பெண்கள் உயர் கல்வியில் சாதிப்பார்கள். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். பெற்றோருடன் இருந்து வந்த கருத்துமோதல் நீங்கும். வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும்.

மாணவ, மாணவிகள் யோகா, தியானம் செய்து நினைவாற்றலை அதிகப்படுத்துங்கள். உயர்கல்வியில் விளையாட்டுத்தனம் வேண்டாம். நுழைவுத்தேர்வு, போட்டித் தேர்வுக்கு முழுநேரம் ஒதுக்கி தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

கலைத்துறையினர் தங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கியைப் போராடி பெறுவார்கள். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களைக் கற்றுத் தெளிவீர்கள்.
இந்த குரு மாற்றம் செலவுகள், அலைச்சல்களைத் தந்தாலும் வெற்றியையும் தரும்.

பரிகாரம்: ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகேயுள்ள பாரியூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகெண்டத்து காளியம்மனை வெள்ளிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். விபத்துக்குள்ளானவர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.


No comments:

Post a Comment