Wednesday 3 February 2016

உச்சி வாசலைத் திறப்போம்

உச்சி வாசலைத் திறப்போம் வாருங்கள்.

முத்திரைகளின் அரசன் என்று கேசரி
முத்திரையைச் சொல்வார்கள். அதைப்போல
ராஜயோகத்தில் யோகத்தின் யோகம் என்று
குண்டலினி யோகத்தைக் கூறுவார்கள். நம்
மூலாதாரத்தில் சுருண்டு இருக்கும்
உயிர்சக்தியே குண்டலினி ஆகும். அதாவது
ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கும் பேரண்ட
சக்தியே குண்டலினி. குண்டலம் போல
வளைந்திருப்பதால் இந்தப் பெயர் வந்தது என்ற
கருத்தும் உண்டு. குண்டலினிக்கு
சித்தர்களும், ஞானிகளும் பல பெயர்களைச்
சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள்.

பாம்பாட்டி
சித்தர் அதைப் பாம்பு என்பார். மேலும்
குடிலாங்கி, புஜங்கி, சக்தி, ஈஸ்வரி, வாலை,
அருந்ததி, வாமி, காமி, துரைப் பெண், ஆத்தாள்,
ஞானம்மா, கண்ணம்மா, பத்து, கன்னி, மௌனி,
வன்னி, பரப்பிரம்மம், காற்றறியாத் தீபம், சிவ
சொரூபம், சஞ்சஞார சமாதி, மூல அங்கி,
தணல், மூலக்குடி வன்னித் தேவர் என்று
இன்னும் பல பெயர்கள் குண்டலினிக்கு
உண்டு.

குண்டலினிச் சக்தியை மூலாதாரச்
சக்கரத்தில் இருந்து சகஸ்ராரம் வரை
கொண்டு செல்வதையே குண்டலினியை
எழுப்புதல் என்பர். பொதுவாக யோக சாதனம்
என்றாலே உள்ளூர இருக்கும் வெப்பத்தைத்
தூண்டுவதே ஆகும். தபஸ் என்றால் வெப்பம்
என்று ஒரு பொருள் உண்டு. அதாவது
வெப்பத்தை எழுப்புவதற்கான முயற்சியே
தவம்.

அப்படி வெப்பத்தால் தூண்டப்பட்ட
குண்டலினி ஒவ்வொரு சக்கரங்களையும்
கடந்து சகஸ்ராரத்தை அடையும். நமது
உடலில் விளங்கும் குண்டலினி சக்தியானவள்
சகஸ்ராரத்தில் சிவனுடன் ஐக்கியமாவதையே
சிவசக்தி ஐக்கியம் என்பார்கள்.

இதுவே
மோட்சம், இதுவே முக்தி. இதையே
ஞானமடைதல் என்கிறோம். பிரபஞ்சத்தின்
ஒவ்வொரு அசைவில் உள்ள சூட்சுமமும்,
நோக்கமும் சாதகருக்கு புரியும். ஞானவாசல்
திறந்தது என்று சொல்வது இதைத்தான்.
கபாலத்தில் உள்ள பத்தாம் வாசல் திறக்கும்.

இதையே திருமூலர், மூலாதாரத்
துவாரத்தையும், கபலத்தில் உள்ள மேலைத்
துவாரத்தையும் திறக்க வல்லவர் களுக்கு,
காலனைக் குறித்த கவலையில்லை, பயமும்
இல்லை என்கிறார். மூலாதாரத்தில் இருந்து
குண்டலினி மேல் நோக்கி பயனப்படும் போது
ஒவ்வொரு ஆதாரத்தைக் கடக்கும் போதும்
அதன் இதழ்கள் மேல் நோக்கி விரிந்து
அதிர்வை வெளிப்படுத்தி ஓசைகளை
உண்டாக்குகின்றன. சமுத்திர ஓசை,
பேரிகைச்சத்தம், மத்தளம், சங்கு, கண்டாமணி,
காகனம் போன்ற ஓசைகளைச் சாதகர்கள்
கேட்பார்கள். கிண்கிணி, வேணி, வீணை, தந்திரி,
வண்டு போன்றவற்றின் இனிய ரீங்காரமும்
கேட்கும். மேலும் ஒவ்வொரு நிலைகளைக்
கடக்கும் போதும் ஆன்மீக மலர்ச்சி
உண்டாகும். அதனால் ஏற்படும் சக்திதான்
சித்தி எனப்படும். மூலாதாரத்தில் இருந்து
அனாகதம் வரை பயனப்படும் குண்டலினியை
அக்கினிகுண்டலினி என்பர். அனாகதம்
தொடங்கி ஆக்ஞாவரை பயனப்படும் போது
சூரிய குண்டலினி என்பார்கள். அதையும்
தாண்டி சுழுமுனையின் இறுதிவரை
செல்லும் போது சந்திர குண்டலினி
என்பார்கள். முடிவில் சகஸ்ராரத்தில் நிலை
பெறும் போது துரிய குண்டலினி என்பார்கள்.

மேலும் குண்டலினியானது தோற்றம்,
நிலைபேறு, அழிவு என்கிற மூன்று
நிலைகளைக் குறிக்கும் முக்கிரந்தி எனப்படும்
மூன்று முடிச்சுகளையும் துளைத்தபடி
மேலே செல்கிறது. அவை மூலாதாரத்தில்
உள்ள பிரம்ம முடிச்சு, அனாகதத்தில் உள்ள
விஷ்ணு முடிச்சு, ஆக்ஞாவிலுள்ள சிவ
முடிச்சு என்பனவாம். யோகத்தின் குறிக்கோள்
இந்த மூன்று முடிச்சுகளையும் அவிழ்த்து
குண்டலினியை சகஸ்ராரத்தில் நிலைபெறச்
செய்வதே ஆகும். அங்ஙனம் நிலைபெற்று,
ஒடுங்கி சிவனோடு இணையும் போதுதான்
சோமாசலம், மதியமுது, மாங்காய்ப்பால்,
காயாப்பால், அமுதப்பால், கருநெல்லிச் சாறு,
கபாலத்தேன், சோமப்பால், பஞ்சாமிர்தம்,
செம்மதிப்பால் என்றெல்லாம் சித்தர்களால்
போற்றிப் புகழப்பட்ட அமுதத்தைப்
பருகுகிறான். அமரத்துவம் பெறுகிறான்.

பேரின்பத்தில் திளைக்கிறான். இதையே
உச்சியில் தாகம் தீர்த்தல் என்பார்கள். இந்த
அமிர்தத்தை தானும் பருகித் திளைத்த
பரவசத்தோடு குண்டலினியானவள் மீண்டும்
சுழுமுனை வழியாக மூலாதாரத்தை
அடைந்து சுகமாய் நித்திரை கொள்வாள்
என்று சொல்லப்பட்டுள்ளது. அவளோடு
அமிர்தமும் மூலாதாரத்தை சேருவதால்
உடம்பு கொழுந்து போன்று என்றும்
பொலிவுடன் விளங்கும் என்று திருமூலர்
சொல்கிறார். முதல் ஆறு சக்கரங்களையும்
யோகா, தியானம், பக்தி, மந்திர உச்சாடனம்
போன்ற பயிற்சிகளை முறையாகத் தொடர்ந்து
செய்துவர தாண்டிவிடலாம், ஆனால்
ஏழாவதான சகஸ்ராரத்தை அடைவது
அவ்வளவு எளிதல்ல. அதற்கு நீண்ட
பயிற்சியும், பக்குவமும் தேவை. ஒரு சிறந்த
குருவின் கீழ் பயிற்சிகளை மேற்கொள்ள
வேண்டும். சக்கரங்களின் வாசல் எளிதில்
திறக்காது. விடாமுயற்சியும், வைராக்கியம்,
இந்திரிய ஒழுக்கமும் அவசியம்.
இவையெல்லாம் கூடுமானால் மெல்ல
மெல்லத் திறக்கும

தினமும் அரைமணி நேரம் தியானம் செய்தால்
5 மணிநேரம் தூங்கினால் கிடைக்கின்ற ஆற்றல்
கிடைக்கும். எப்படியெனில் நமது மூளையில்
ஒஜோன் என்ற பகுதி இருக்கிறது. அதன்
ஆற்றலை தியானம் செய்வதால் அதிகரிக்க
முடியும். இதன்மூலம் அதிகம்
தூங்காமலேயே உடலை சுறுசுறுப்பாகவும்
ஆரோக்கியமாக வும் வைத்துக் கொள்ள
முடியும்.

சித்தர்கள், விஞ்ஞானிகள் , படைப்பாளர்கள்,
சிந்தனையாளர்கள் ஆகியோருக்கு இயல்பாகவே
இந்த பகுதியின் ஆற்றல் சிறப்பாக இருக்கும்.
தூக்கத்திற்கும் தியானத்திற்கும் ஒரு முக்கிய
வித்தியாசம் உண்டு. அது என்னவெனில்
தூக்கத்தில் உடல் தன் செல்களை
புதுப்பித்துக் கொள்ளும்.அதன் மூலம்
மூளைக்கு தேவையான அக்ஸிஜனை
எடுத்துக்கொள்ளும்.

ஆனால் தியானத்தில் மூளை தன்
இயக்கத்தையே முழுதாக புதுப்பித்துக்க
ொள்ளும். அதன் மூலம் உடலுக்குத்
தேவையான ஓய்வும் கிடைக்கும். சரி புரியும்
படியாகவே கூறுகிறேன்.உடலை மூன்று
அடுக்குகளாக கற்பனை செய்யுங்கள்.இதில்
இதயம் மையப்பகுதி சிறுநீரகம்
கீழ்ப்பகுதி.மூளை மேல்பகுதி.இதில் தியான
ஆற்றல் என்பது மேல் முறையில் மூளையின்
செயல்பாடுகளையே முற்றிலும் நிறுத்தி
ஓய்வெடுக்க செய்து, தேவைப்படும் போது
அதன் ஆற்றலை முழுமை படுத்தவும்
செய்யும் உபயம். தூக்கம் என்பது உடலை
ஓய்வெடுக்க செய்ய இருக்கின்ற ஒருவழி
அவ்வளவுதான். சுருங்க கூறுவதென்றால்
தியானமும்
தூக்கமும் ஒரு நாணயத்தின் இரண்டுபக்கம்.
சரியா? இரண்டும் ஒன்றாகவே ஆகாது.

சிலருக்கு கண்ணை மூடி அமர்ந்தாலே கொஞ்ச
நேரத்தில் குறட்டை வரும். தியானத்தில்
தூக்கமோ குறட்டையோ வராது. இன்னொன்று
வழக்கமாக செய்யும் ஓம்கார தியானம்,
குண்டலினி தியானம், பிரபஞ்சா தியானம்,
ஆனந்தா தியானம், ஆல்பா தியானம் இது
எதுவுமே மனதை கடந்த தியானம் அல்ல,
இவை அனைத்துமே தியானத்தின் ஆரம்ப
நிலை தயார்படுத்தலே.
உண்மையான தியானத்தில் அதன்பிறகு கலக்க
வேண்டும்.

அந்த நேரத்தில் மதம், கொள்கை, வழிபாடு,
துன்பம், இன்பம், நோய், அனைத்தும்
நின்றுவிடும் மனது முற்றிலும்
இறந்துவிடும்.

இதுவே தியானநிலை.

இந்த வகை தியானத்தில் தேர்ந்தவர்களுக்கு
தூக்கம், துக்கம் எதுவுமே வராது. அது
தேவையும் படாது.!

No comments:

Post a Comment