Monday 15 May 2017

தேவி மகாத்மியம்

தேவி மகாத்மியம்

கலியுகத்தில் சண்டி தேவியும் கணேச பெருமானும் விரைவில் நன்மையை தருவார்கள் என்பது பழமொழி. துர்க்கா தேவி தான் சண்டி என்றும் சண்டிகா என்றும் அழைக்கப்படுகிறாள். துர்க்கா தேவியின் பெருமையை கூறும் நூல்களுள் தேவி மஹாத்மியம் மிக சிறந்தது. இது மார்க்கண்டேய புராணத்தில் அடங்கியது. எழுநூறு மந்திரங்கள் கொண்டது. ஆகவே இந்த நூலை சப்த சதி என்றும் கூறுவர். இந்த மந்திரங்களால் தான் சண்டி ஹோமம் செய்ய படுகிறது. தினசரி அல்லது நவராத்ரி நாட்களில் இதை பாராயணம் செய்து வந்தால் சகல காரிய சித்தியும் உண்டாகும்.

குறிப்பாக துர்க்கா சப்த ஸ்லோகி சப்த சதியின் சக்திமிக்க மந்திரங்கள் ஆகும்.
சைய்த்ர வம்சத்தில் தோன்றிய சுரதன் எனும் அரசன் வினை வசத்தால் நாடிழந்து கொலாவித்வம்சி எனும் பகைவரால் துரத்தப்பட்டு காட்டை அடைந்தான். அங்கும் தன் நாடு, மனைவி, மக்கள் இவற்றை நினைத்து வருந்தினான். அங்கே வாடிய முகத்தோடு ஒரு வைசியனை கண்டு விசாரித்ததில் அவனும் தன்னை போலவே இருப்பதை உணர்ந்து இருவரும் ஒரு முனிவரை அணுகி அறிவுள்ளவராக இருப்பினும் எங்களுக்கு நாடு, மனைவி, மக்களிடம் அன்பு உண்டாக காரணம் யாது என்று கேட்டனர். அம்முனிவர் மஹா மாயையினால் நீங்கள் மயங்கிநீர்கள், அந்த மாயை தான் பந்த மோட்சத்திற்கு காரணம். மாயை ஞானிகளின் மனதையும் மயக்கும் திறமையுடையது என்றார். அரசன் மாயை பற்றி வினவினான். மாயை நித்யயானாலும் தேவர்களின் காரியத்திற்காக தோன்றும், அப்போது உற்பதியனதாக சொல்வர்.

முன்னொருகாலத்தில் விஷ்ணு யோகநித்திரையில் ஆழ்ந்திருந்த பொழுது அவருடய காது மலத்திலிருந்து மது கைடபன் என்று இரு அசுரர் தோன்றி திருமாலின் நாபிகமலத்திலுள்ள பிரம்ம தேவனை கொல்ல முற்பட்டனர். பயந்த பிரம்மன் விஷ்ணுவின் யோகமாயை ராத்ரி ஸுக்தம் என்ற ஸ்துதியால் துதித்தார். யோகமாயை விலகி விஷ்ணு சக்தி பெற்று அவ்வசுரர்களுடன் போரிட்டார். மயங்கிய அசுரர் வரம் அளிக்கிறோம் பெற்று கொள் என்றனர். "நீங்கள் என்னால் கொல்ல படவேண்டும் இதுவே என் வரம்" என்று விஷ்ணு கூற, வஞ்சிக்க பட்ட மது கைடபர்கள் எங்கும் ஜலமயமாக இருப்பதை கண்டு, "ஜலத்தால் நனையாத இடத்தில எங்களை கொள் என்றனர். விஷ்ணுவும் தனது மடியில் வைத்து அவர்களை கொன்று மதுசூதனன் என பெயர் பெற்றார். கைடபஜித் என்ற பெயர் மாலுக்கும், யோகமாயை விலக்கி அவருக்கு சக்தி உண்டாக்கினமையால் சக்திக்கு மதுகைடபஹந்த்ரி என்றும் பெயர் விளங்குகிறது.

மகிஷாசுரனால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் பிரம்மனின் தலைமையில் மாலிடமும், சிவனிடமும் முறையிட அப்போது சகல தேவர்களின் சரீரங்களில் உள்ள சக்திகள் யாவும் வெளிப்பட்டு ஒன்று சேர்ந்த ஒரு தேவியின் உருவம் பெற்றது.

தேவர்கள் யாவரும் தங்களது அனைத்து ஆயுதங்களையும், படைகளையும் தேவிக்கு தந்தனர். அன்னை போருக்கு ஆயத்தமானாள். மகிஷாசுரன் போர் தொடுத்தான். கோடிகணக்கான யானை, தேரில் குதிரை, காலாட்படைகளுடன் வந்து சிக்ஷுரன், சாமரன், உதக்ரன், மஹாஹநு, அசிலோமன், பாஷ்கலன், பிண்டாலன் முதலிய அசுர சேனாதிபதிகள் கத்தி, தோமரம், பிண்டிபாலம், வில், வேல் சூலம் முதலிய பல ஆயுதங்கள் கொண்டு தேவியுடன் போரிட்டு தோற்றனர்.

வகானமாகிய சிங்கம் கோடனுக்கோடி பேரை கொன்றது. அசுரர்கள் உடலின் உறுப்புக்களை இழந்து பல திக்குக்களில் ஒட்டமெடுத்தனர். போர்களத்தில் குருதி வெள்ளம் நிரம்பி செல்ல முடியாமல் கடல் போல் சூழ்ந்தது.

சேனைகள் நாசமடைந்தது கண்ட சிக்ஷுரன், சிங்கத்தை அடித்து அம்பிகையை வாளால் வெட்டினான். ஆனால், கத்தி தூள்த்தூள் ஆனது. யானை மீது வந்த அசுரனை பூமியில் தள்ளி சிங்கமே அவனை கொன்றது.

முற்கூறிய அத்தனை சேனை தலைவர்களும் மாண்டனர். சைதன்யம் அழியவே அசுர அரசன் எருமை மாட்டின் உருவம் கொண்டு கொம்பாலும், வாலாலும், முகத்தின் அசைவிநாலும், குளம்பினாலும் தேவியின் பல கணங்களை போரிட்டு வீழ்த்தினான். தேவி பாசத்தால் அவனை கட்டிய போது சிங்க ரூபமாக, யானை ரூபமாக, மனித ரூபமாக எல்லா ரூபங்களிலும் போரிட்டு முடிவில் எருமை ரூபத்தோடு போரிட்டான். தேவி வீரபானம் அருந்தி அவன் கழுத்தில் காலை ஊன்றி, சூலத்தால் அடித்து, வாளால் வெட்டி வீழ்த்தினாள்.

தேவர்கள் தேவியை துதித்து சூலேனயாகி என்று தொடங்கிய நான்கு ஸ்லோகங்களும் கவசமும் நீயே. உலகின் படைத்தல், காத்தல், அழித்தல் இவைகளுக்குக் காரணமும் நீயே, உன்னை சேவிப்போருக்கு வறுமை, பிணி, துக்கம் உண்டாகாது. பக்தரிடம் தயையும், பகைவரிடம் உன் வீரமும் ஒப்ப்றன. நீயே லக்ஷ்மி, நீயே கௌரி, நீயே துர்க்கை, எங்களை எவ்வகையிலேனும் எங்கள் உடலின் எல்லா இடங்களிலும் துன்பமின்றி காக்க வேண்டும் என்று மலர்களால் அர்ச்சித்தனர். மகிழ்ந்து பிரசன்னமான தேவியிடம் எங்களுக்கு எந்த குறையும் இல்லை, ஆனாலும் உன்னை நினைத்தபோதெல்லாம் எங்களை காப்பாயாக. மேலும், இந்த ஸ்தோத்திரம் துதிப்போருக்கெல்லாம் சகல வித நன்மையும் அருள வேண்டும் என்று துதித்தனர். அவ்விதமே அருள் செய்து அந்த மகிஷாசுரமர்த்தினி மறைந்தாள்.

இது முதல் கடைசி வரை உத்தம சரிதம் எனப்படும். பின்னொருக்காலத்தில் சும்பநிசும்பர்களால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் இமயம் சென்று முன்பு தேவி வரம் கொடுத்ததை நினைத்து துதித்தனர். இந்த ஸ்துதி தேவி ஸ்துதி எனப்படும். கங்கையில் நீராட வந்த பார்வதியின் சரீரத்திலிருந்து ஒரு தேவி தோன்றினாள். கொசத்திலிருந்து தோன்ரினமையால் கௌசீகி என பெயர் பெற்றால்.கௌசீகி தோன்றிய பிறகு பார்வதி கருப்பாக ஆகி காளிகா என பெயர் பெற்றால். கௌசீகியின் அழகு ரூபத்தை கண்ட ஒற்றர் இருவர், சும்ப நிசும்பர்களிடம் சென்று அவள் அழகை வர்ணித்து சிறந்த பொருட்க்களுக்கு இடமாக இருக்கும் அரசரிடத்தில் சிறந்த பெண்மணியும் இருக்க வேண்டும் என்றனர். சபலமடைந்த அரசன் சுக்ரீவன் என்ற தூதனை தேவியிடம் அனுப்பினான். அவன் அசுர அரசனின் பெருமைகளை கூறி தேவியை வரும்படி அழைக்கிறான். அதற்க்கு தேவி " என்னை போரில் வேல்பவனையே நான் மணப்பதாக முன்பே உறுதி கொண்டேன், ஆதலில் அசுரர் என்னை போரில் வென்று கைபற்றட்டும்" என்றாள். "தேவி கர்வம் கொள்ளாதே, அசுரர் பலசாலிகள் பிறகு அவமானம் அடைவாய்" என்று தூதன் மறுமுறை கூறினான். "அறிந்தோ, அறியாமலோ நான் சபதம் பூண்டுவிட்டேன், என் உறுதி மாற்ற முடியாதது, அவர்களை சீக்கிரம் வரச்சொல்" என்றால் தேவி.

சும்பாசுரனால் ஏவப்பட்ட தூம்ரலோசனன் தேவியை வரும்படி அழைக்கிறான். " நீ பலவான் பலவானால் அனுப்பப்பட்டவன், சேனையுடன் வந்துள்ளாய், பலாத்காரமாய் என்னை இழுத்து செல்லலாம் " என்றாள். அசுரன் ஆவேசத்துடன் ஓடி வரும் பொழுது ஹூங்காரத்தால் அவனை மடிய செய்தாள்.

சேனை யாவும் வாகனமாகிய சிங்கத்தால் அழிந்தது. அசுர மன்னன் சண்டன் முண்டன் என்ற இரு அசுரர்களை மறுபடியும் தேவியிடம் அனுப்பினான்.

வந்த சண்ட முண்டர்களை கண்டு கோபித்த கௌசீகியின் நெற்றியிலிருந்து காளி தோன்றினாள். கையில் கத்தி குழிந்த கண்கள் புலித்தோல் ஆடை அகன்ற வாய் நாக்கை நீட்டி அடிக்கடி தொங்கவிடுகிறாள்,

பயங்கரமான சப்தம், இப்படிய தோற்றத்துடன் காளி பல ஆயுதங்கள் கொண்டு அசுர படையெல்லாம் அழித்து சண்ட முண்டர்களையும் கொன்று, சண்டனுடைய தலையையும், முண்டனுடைய முண்டத்தையும் அம்பிகை முன் காணிக்கையாக்கி வணங்கினால், "கௌசீகி சண்ட முண்டர்களை கொன்றமையால் நீ சாமுண்டா என்ற பெயருடன் விளங்குவாயாக" என்று அருளினாள்

பின் கூட்டமாக சகல அசுர அரசர்களும் ரக்தபீஜன் என்ற அசுரனை துணையாக கொண்டு வருகின்றனர். ரக்தபீஜன் உடலிலிருந்து ரத்தம் பூமியில் விழுமாயின் அவனை ஒத்த பலமுடைய அசுரர்கள் ஒரு சொட்டிற்கு ஒருவர் வீதம் உண்டாவர் என்பது அவன் பெற்ற வரம். தேவி சிவனை அசுரரிடம் தூது அனுப்பினால். "அசுரர் பாதாளம் செல்லட்டும், இந்திரன் த்ரிலோகத்தை ஆளட்டும், இல்லாவிட்டால் போரில் என்னை சூழ்ந்துள்ள நரிகள் உங்களை தின்று திருப்தி அடையும்" என்ற தேவியின் வாக்கை கேட்ட பிறகும் அசுரர் போரிட்டனர். சக்திகளால் அடிபட்ட அசுரனின் ரத்தத்திலிருந்து பல அசுரர் தோன்ற உலகம் நிறைந்து விட்டது. தேவர் பயந்தனர். அம்பிகை சாமுண்டா தேவியை அழைத்து, "நான் அவனை அடிக்கிறேன், பெருகுகின்ர ரத்தத்தை நீ கீழே விழாதபடி பருகு, அதனால் அவன் ரத்தமின்றி இறப்பான்" என்றாள். சாமுண்டா தேவி அப்படியே செய்யவும் அவன் இறந்தான். தேவர் மகிழ்ந்தனர். சிவனை தூதாக அனுப்பிய அம்பிகைக்கு சிவா தூதி என பெயர் உண்டாயிற்று.

தேவிக்கும் சும்ப நிசும்பர்களுக்கும் கடும் போர் நடந்தது. தேவி நிசும்பனுடைய ஹ்ருதயத்தில் குத்தின பொழுது அங்கிருந்து அசுரன் ஒருவன் தோன்றினான். அவன் தோன்றும் போதே தேவியின் கத்திக்கு இறயனான். மகேஸ்வரி, வாராகி முதலிய சக்திகளும் பல அசுரர்களை வீழ்த்தினர்.
தம்பி இறந்தது கண்ட சும்பன் பிறருடைய பலம் கொண்டு சண்டை இட்டு வீண் கர்வம் கொள்ளாதே என்று கூறினான். அதற்க்கு தேவி பதில் சொன்னாள் "உலகில் நான் ஒருவளே இவர்கள்லெல்லாம். என் விபூதியே என்னுள் இவர்களை அடக்கிகொள்கிறேன்" என்று கூறி தன்னுடலுள் யாவரையும் அடக்கி கொண்டாள். சும்பனும் தேவியும் பூமியிலும் வானத்திலும் மாறி மாறி சண்டை இட்டனர். இறுதியில் தேவி சூலத்தால் குத்தி வீழ்த்தினாள். இதுவரை இருந்த பல அபசகுனங்கள் விலகின. காற்று இனிமையாக வீசியது, கதிரவன் ஒளிவிட்டான்.

இவ்வத்தியாயம் நாராயணி ஸ்துதி எனப்படும். சரணடைந்தவர்களை காப்பவள் நீயே, உலகிற்கு ஆதாரமாய் இருப்பவளே, சுவர்க்க மோட்சங்களையும் அளிப்பவளே, பஞ்சக்ருதியும் புரிபவளே. மகேஸ்வரி, வைஷ்ணவி, வாரகி, நாரஸிம்ஹி, ஐந்த்ரி, சிவதூதி, கௌமாரி, சாமுண்டா, பிராம்மணி முதலிய ரூபங்களுடன் அசுரரிடம் போரிட்டு உலகை காத்தவளே திருடன் முதலியவர்களிடம் இருந்தும் எங்களை காப்பவளே, உனக்கு வணக்கம் என்று துதித்தனர். தேவர்களின் வேண்டுகோளுக்கு இறங்கி மூவுலகிற்கும் சகல வித நன்மையும் அளிப்பதாக தேவியே கூறினாள். நந்தா விந்த்யசலவாசிணி, பீமா பிரைமரி துர்கா, ரக்ததந்திகா சதாக்ஷி முதலிய பல அவதாரங்கள் எடுத்து தேவ சத்ருக்களை அழிப்பேன், அனைத்துயிரையும் காப்பேன் என்கிறாள்.

தேவி மகாத்மியமாகிய இந்த என் சரிதத்தை படிப்போருக்கு எல்லா வித துன்பங்களையும் பேக்குவேன், பரம புருஷார்த்தங்களையும் அளிப்பேன். அறிந்தோ அறியாமலோ செய்யப்படும் பூஜை, ஹோமம், ஜபம், பாரணங்களால் மிகவும் மகிழ்வேன். தேவி மஹாத்மியம் படிக்குமிடத்தில் நான் எப்போதும் நடமாடுவேன். வம்சம் அபிவ்ருத்தி அடையும். என்னை நோக்கி எனக்காக தூப தீபமிட்டு நைவேத்யம், அபிஷேகம் பல வித தானங்கள் எல்லாம் செய்து வருட கணக்காக செய்கின்று பூஜையினால் எனக்குஏற்படும் மகிழ்ச்சியை, ப்ரீத்தியை தேவி மகாத்மியத்தை ஒரு தரம் மிகுந்த பக்தியுடன் படித்தால் அல்லது படிக்க கேட்டாலே யான் அதைவிட சந்தோஷித்து மகிழ்வேன். தேவி ஸ்துதி, பிரம ஸ்துதி, பிர்மரிஷி ஸ்துதி இவைகளை ஜபிபதால் நல்ல புத்தி உண்டாகும். என்னை நினைத்தமாத்திரத்தில் எல்லா விதத்திலும் எல்லா வித ஆபத்திலிருந்தும் காப்பேன் என கூறி மறைந்தாள்.

தேவர்கள் சுவர்க்க லோகம் சென்றனர். இந்த தேவி தான் உங்களுக்கு மயக்கத்தை உண்டாக்கி நாடு, மனைவி, மக்களிடம் அன்பு கொள்ள செய்தவள். அவளை வணங்கி பூஜித்து நற்கதியை அடையுங்கள் என்று முனிவர் கூறி முடித்தார்

முகவுரை
மகாபாரதத்தின் நடுநாயகமாக எழுநூறு சுலோகங்களடங்கிய பகவத்கீதை அமைந்திருப்பது போல் மார்க்கண்டேய புராணத்தில் எழுநூறு மந்திரவடிவான தேவீ மஹாத்மியம் அமைந்திருக்கிறது. இது சண்டிகா தேவியின் பெருமையைக் கூறுவதால் சண்டீ என்றும், எழுநூறு மந்திரங்களடங்கியதால் ஸப்தசதீ என்றும் கூறப்படும். ஆஸ்திகர்களால் இது இமயம் முதல் கன்யாகுமரி வரை பாரததேசம் முழுதும் பாராயணத்திற்கும் ஜபத்திற்கும் ஹோமத்திற்கும் உலக ஷேமத்திற்காகவும் அரிஷ்ட நிவிருத்திக்காகவும் தொன்றுதொட்டுப் பெரிதும் கையாளப்பட்டு வருகிறது.
இதற்கு உரைகள் பல உள. இவற்றுள் சில சாந்தனவீ, புஷ்பாஞ்ஜலி, ராமாச்ரமீ, நாகேசீ, குப்தவதீ, தம்சோத்தாரம், துர்க்காப்ரதீபம் என்பனவாம். காத்யாயனீதந்த்ரம், கடகதந்த்ரம், க்ரோடதந்த்ரம், மேருதந்த்ரம், மரீசிகல்பம், ருத்ரயாமளம், சிதம்பர ரஹஸ்யம் முதலிய ஆகம நூல்களிலும் பல்வேறு புராணங்களிலும் தேவீ மஹாத்மியத்தின் பெருமை விளக்கிக் கூறப்படுகிறது.

பூர்வ பாகத்தில் கவசம், அர்க்கலம், கீலகம், ராத்ரி ஸூக்தம், நவாக்ஷரீ விவேசனம் ஆகியனவும் நடுவில் முன்று சரித்திர வடிவில் தேவீ மஹாத்மியமும், கடைசியில் தேவீ ஸூக்தம், ரஹஸ்யத்ரயம் ஆகியனவும், அநுபந்தமாக துர்க்கா ஸப்த ச்லோகீ, துர்க்கா ஸூக்தம், இந்த்ராக்ஷீ ஸ்தோத்ரம், துர்க்கா ஆபதுத்தாராஷ்டகம், தேவ்யபராக்ஷமாபன ஸ்தோத்ரம் இப்படி பாராயணம் செய்யவேண்டும்.

பிரம்ம வித்தையும் ஸ்ரீ வித்தையும் ஒன்றே என்பதைக் கருத்தில் கொண்டு தேவீ மஹாத்மியத்தைப் பாராயணம் செய்ய வேண்டும். பிரம்ம வித்தையான வேதாந்தம் கூறும் உண்மைகளை அனுபவத்திற்குக் கொண்டுவர வழிகாட்டுவது ஸ்ரீ வித்தை. மந்திரமும் தந்திரமும் ஸ்ரீ வித்தையில் அடக்கம்.

ததா தாம் தார - மித்யாஹூ - ரோமத்மேதி பஹுச்ருதா : தாமவே சக்திம் ப்ருவதே ஹ்ரீ - மாத்மேதி சாபரே

ஒரே பரம்பொருள் தான் ஓம் என்ற பிரம்மவித்யா மந்திரத்தாலும் ஹ்ரீம் என்ற ஸ்ரீ வித்யா மந்திரத்தாலும் கூறப்படுகிறது. பிரம்மமும் பிரம்ம சக்தியும் பிக்க முடியாதாதலால் ஒங்காரமும் உபயாத்மகம். ஹ்ரீங்காரமும் உபயாத்மகம். ஹ்ரீம் என்பது மாயா பீஜம் அல்லது புவனேசுவரீ பீஜம் எனப்படும். விதையிலிருந்து முளை, கிளை, அரும்பு, மலர், காய், கனி முதலியன தோன்றுமாப் போல் புவனேசுவரீ பீஜத்திலிருந்து மஹாகாளீ, மஹாலக்ஷ்மீ, மஹாஸரஸ்வதீ தோன்றுகின்றனர். அவர்களுடைய ஸமஷ்டி மந்திர வடிவங்களில் முக்கியமானவை இரண்டு - நவாக்ஷரீ மந்திரதீøக்ஷ பெற்றவர் நவார்ண ஜபத்திற்கு அங்கமாக ஸப்தசதீ பாராயணத்தையும், ஸப்தசதீ மந்திரதை முக்கியமாய்க் கொண்டவர் அதற்கங்மாக நவாக்ஷரீ ஜபத்தையும் அனுஷ்டிப்பது காணப்படுகிறது.

சிதம்பர ரஹஸ்யத்தில் பரமேசுவரர் பார்வதிக்குக் கூறியது: தேவியே! ஸப்தசதீயின் மகிமையைக் கூறுகிறேன், கேள். அதைப் படிப்பவர் ஏழ்மையினின்று விடுபடுவர், சின்மயமான திரிபுரா மூன்று வடிவு கொண்டாள். அசுரர்களை போக்கித் தேவர்களுக்கு அருள் புரியும் பொருட்டுப் பரதேவதை காளியுருக் கொண்டாள். அவளே காலாந்தரத்தில் லக்ஷ்மியாகவும் ஸரஸ்வதியாகவும் தோன்றினாள். அவள் வரலாறு பதின்மூன்று அத்தியாயங்களில் எழுநூறு மந்திரங் களில் மார்கண்டேய புராணத்தில் கூறப்பட்டுளது, அதைப் படிப்பவர் எல்லா உபத்திரவங்களினின்றும் விடுபட்டு ஸகல சௌக்கியங்களையும் அடைவர்.

கிரதுக்களில் எங்ஙனம் அசுவமேதமோ, தேவர்களில் எங்ஙனம் ஹரியோ, அங்ஙனம் ஸ்துதிகளில் ஸப்தசதீ என்று டாமரதந்திரம் கூறுகிறது.

(யதா வேதோ ஹ்யனாதிர்ஹி தத்வத் ஸப்தசதீ ஸ்ம்ருதா) வேதம் எப்படி அனாதியோ அப்படி ஸப்தசதீ என புவனேசுவரி ஸம்ஹிதை கூறுகிறது.

இதை பாராயணம் செய்ய நித்திய கர்மாவை முடித்துப் பரிசுத்தமான இடத்திலமர்ந்து ஆசமனம், பிராணாயாமம், ஸங்கல்பம் முதலியவற்றைச் செய்துகொண்டு ஸாவாதானமாக முன் பின் கூறியுள்ள அங்கங்களுடனும் நவாக்ஷரீ ஜபத்துடனும் கைக்கொள்ள வேண்டும். ஒரே தடவையில் பதின்மூன்று அத்தியாயங்களையும் பாராயணம் செய்ய அவகாசமில்லாதபோது மத்திம சரித்திரத்தை மட்டிலும் படிக்கலாம் அல்லது தொடர்ச்சியாக ஏழு தினங்களில் 1 ; 2-3 ; 4 ; 5-6-7-8 ; 9-10 ; 11 ; 12-13 என்ற கிரமத்தில் படிக்கலாம். ஒரு சரித்திரதில் அரை குறையாகப் படிக்கக் கூடாது என்ற நியமம் இந்த முறைக்கு இல்லை.

  ஸகாம பக்தன் இதனால் மனதில் கருதியதை யடைவான். நிஷ்காம பக்தன் மோக்ஷத்தை யடைவான். ஸூரத மகாராஜனுக்கு மேதாமஹரிஷி கூறியதாவது : பரமேசுவரியைச் சரணடைவாய், அவளை ஆராதித்தால் அவள் இகலோக இன்பங்களையும் ஸ்வர்க்கத்தையும் மோக்ஷத்தையும் அளிப்பாள். அரசன் தன் அரசாட்சியை மீண்டும் பெற்று இன்ப வாழ்வெய்தி எதிர்காலத்தில் மனுவாக விளங்கப்போகிறான் என்றும் ஸமாதி என்ற வைசியன் ஞானம் பெற்று மோக்ஷமடைந்தான் என்றும் கூறி தேவீ மஹாத்மிய வரலாறு முடிவடைகின்றது.

No comments:

Post a Comment