Monday 15 May 2017

கால சர்ப்ப தோஷம்

கால சர்ப்ப தோஷம் :

சர்ப்ப தோஷ அமைப்பில் ராகு கேதுவோ சூரியனுடைய நக்ஷத்திரத்தில் நின்று விட்டால் தோஷத்தை தராது. ஏன் என்றால் சர்ப்பங்களின் அதிதேவதை சூரியன். சூரியனின் அதிதேவதை பரமேஸ்வரன் ஆகவே தோஷம் தராது. ஒரு ஜாதகத்தில் பாதி கட்டங்கள் காலியாக இருந்தால் அது பூரண கால சர்ப்பதோஷம் ஆகும்.

ஒரு கிரஹம் இதை விட்டு வெளியே சென்றால் அது தோஷம் இல்லை. இந்த யோகத்தின் மூலமாக விபத்து, மந்திர அடிமை, போன்றவை ஏற்படுமா என்பதை காணலாம். இந்த யோகம் தீமை செய்யாது. பலவீனமான கிரஹங்கள், வீடுகள் இவற்றிர்க்கு ராகு, கேது பார்வை, சேர்க்கை பெற்றால் கால சர்ப்பதோஷம் தீமை செய்யும். இந்த தோஷம் பல வகைப்படும். அவை பின் வருமாறு:

1. அனந்த கால சர்ப்பதோஷம் (விபரீத கால சர்ப்பதோஷம்): லக்னத்தில் ராகு 7ம் வீட்டில் கேது அமைந்து இவைகளுக்கு இடையில் மற்ற கிரஹங்கள் அமைவது. 27வயது வரை சிரமமும் பிறகு நல்ல மாற்றங்களும் ஏற்படும்.

2. குளிகை கால சர்ப்பதோஷம்: 2ம் வீட்டில் ராகு 8ம் வீட்டில் கேது : இந்த அமைப்பு எதிர்பாராத பொருள் இழப்பையும், பூர்வீக சொத்துக்களை இழக்கும் நிலையும், உடல் நலத்திற்க்கு கேடும், விபத்து போன்றவையும் ஏற்படும். 32 வயதுக்கு மேல் யோகம் ஏற்படும்

3. வாசுகி கால சர்ப்பதோஷம்: 3ம் வீட்டில் ராகு 9ம்வீட்டில் கேது: இந்த அமைப்பு ஜாதகரின் தொழிலில் அல்லது அவரது வேலையில் பிரச்சனைகளைக் கொடுக்கும். சகோதரி, சகோதரர்களுக்குள் பிரச்சனை, தேவையான சமயத்தில் உதவிகள் கிடைக்காமை, துணிந்து எதையும் செய்யமுடியாமல் இருப்பது போன்ற பலனை தரும். 36 வயதுக்கு மேல் நல்ல பலனைத் தரும்.

4. சங்கல்ப கால சர்ப்பதோஷம்: 4ம் வீட்டில் ராகு 10ம் வீட்டில் கேது: 3வதில் சொன்ன பலனோடு மன அழுத்தம் போன்றவை வரும் . வேறு சில பெண்களோடு தொடர்பு ஏற்படும் அதனால் இவருக்கு குழந்தை ஏற்பட்டு அதனால் அவமானம் ஏற்படும். வெளியில் சொல்ல முடியாத தகாத உறவுகள் ஏற்படும். 42வயதுக்கு மேல் நல்ல பலன் தரும்.

5. பத்ம கால அல்லது பாத கால சர்ப்பதோஷம்: 5ம் வீட்டில் ராகு 11ம் வீட்டில் கேது: இது தான் புத்ர தோஷத்தை கொடுக்கக் கூடிய மிகவும் பாதகமான சர்ப்பதோஷம் ஆகும். மேலும் 5ம் வீடு பூர்வ புண்ய ஸ்தானம் ஆகிற படியால் இந்த அமைப்பு இருந்து சந்திரனும் கெட்டுவிட்டால் பேய், பிசாசு போன்ற ஆவிகளின் தொல்லைகள் ஏற்படும். நண்பர்கள், பழகியவர்கள் கூட விரோதியாவார்கள். எடுத்த காரியங்களில் தடை உண்டாகும். 48 வயதுக்கு மேல் நல்ல பலனை கொடுக்கும்.

6. மஹா பதம கால சர்ப்பதோஷம்: 6ம் வீட்டில் ராகு, 12ம் வீட்டில் கேது: : இது முக்கியமாக அரசியல்வாதிகளுக்கு அமையும். ஏன் என்றால் இது பிற்காலத்தி ஒரு நல்ல புகழையும், அதிகார பதவியும், அந்தஸ்த்தையும் கொடுக்கவல்லது. இந்த அமைப்பு எதிரிகளால் பிரச்சனை, சிறைவாசம், வீண்விரயங்கள், அரச தண்டனை போன்றவை ஏற்பட்டு 54 வயதுக்கு மேல் மேற்ச்சொன்ன பலனை தரும். சிலர் தன் கெளவரத்திற்காக கோயில் திருப்பணி, அறக்கட்டளை போன்றவை நிறுவி தொண்டு செய்வார்கள்.

7. தக்ஷக கால அல்லது கால மிருத்யு சர்ப்பதோஷம்: 7ம் வீட்டில் ராகு லக்னத்தில் கேது: ஒன்றில் சொன்ன பலன் 27வயதுக்கு முன்திருமணம் செய்து கொண்டால் கணவன் மனைவிக்குள் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து வரை செல்லும், சிலர் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளாமல் தெய்வ திருப்பணி செய்வார்கள்.

8. கார்க்கோடக கால சர்ப்பதோஷம்: 8ல் ராகு 2ல் கேது: மிகவும் கொடிய தோஷம்: தனக்குதானே அழிவை ஏற்படுத்திக் கொள்வார். தந்தையின் பணத்திற்காக அவருக்கே உயிருக்கு உண்டான கண்டத்தை ஏற்படுத்துவார். அதனால் தந்தை வழி சொத்து இவருக்கு கிடைக்காது. மற்றவர்களின் இன்ஷூரன்ஸ் பணம் இவருக்கு கிடைக்கும்.

9. சங்ககுட கால சர்ப்பதோஷம்: 9ல் ராகு 3ல் கேது: வாழ்க்கை மேடு பள்ளமானதாக இருக்கும். சில நாட்கள் முன்னேற்றம், சில நாட்கள் தாழ்வு நிலை, சில நாட்கள் பிரபலமாகவும், சில நாட்கள் தலைமறைவு வாழ்க்கையும் நடத்துவார்கள். 36வயதுக்கு மேல் நல்ல பலனைத் தரும்.

10. கடக கால சர்ப்பதோஷம்: 10ல் ராகு 4ல் கேது: தொழிலில் தடை , அலுவலகங்களில் அவமரியாதை ஆனால் 47 வயதுக்கு பிறகு மிகச் சிறந்த தொழில் அதிபர், வேலையில் உயர் பதவி கிடைக்கும். ஆனால் சிம்ம, கன்னி லக்னக்காரர்களுக்கு இந்த அமைப்பு அரசின் உயர் பதவி கிடைக்கும்.

11. விஷ்தார கால சர்ப்பதோஷம்: 11ல் ராகு 5ல் கேது: வெளி நாட்டில் வாசம். குழந்தைகள் மூலமாக வருத்தங்கள் ஏற்படும். அடிக்கடி பயணம் ஏற்படும். 48 வயதுக்கு மேல் நல்ல பலன் உண்டு.

12. சேஷ கால சர்ப்பதோஷம் :  12ல் ராகு 6ல் கேது: அசுபர்கள் மறைவு ஸ்தானத்தில் இருப்பதால் நல்ல பலன் கல்வியில் சிறந்த நிபுணத்தன்மை ஏற்படும். வெளி நாட்டில் உயர் கல்வி பயிலும் வாய்ப்பு உண்டாகும். வயோதிக காலத்தில் பேரும், புகழும் உண்டாகும். அந்நிய நாட்டில் சில காரணங்களுக்காக சிறை செல்ல நேரிடும்.

மேற்ச் சொன்ன பலன்கள் யாவையும் ராகு, கேது தசாவிலும், மற்றவர்களின் தசாவில் ராகு, கேது அந்தரங்களிலும் நடக்கும்.

அந்த தசா புத்திகள் காலத்தில் ஒரு நல்ல ஜோதிடரை அணுகி என்ன பரிகாரம் செய்யலாம் என்பதை தெரிந்து கொண்டு செய்வது நல்லது. அந்த காலத்தில் தோஷத்தின் வீரியம் குறைய பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வாருக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

ராகு கேதுக்கள் எந்த நக்ஷத்திரத்தில் நிற்கிறார்களோ அந்த நக்ஷத்திரத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்வது நல்லது. பாம்பின் மேல் பள்ளி கொண்டிருக்கும் பெருமாள் கோயிலில் பரிகாரம் செய்து கொள்வது நல்லது.

ஸ்வாதி, சதயம், திருவாதிரை நக்ஷத்திரம் வரும் நாட்களில் உள்ள பிரதோஷ காலத்தில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்தால் உடலில் உள்ள ராகு கேதுவின் விஷத்தன்மை நீங்கி சுகம் பெறலாம்.

No comments:

Post a Comment